நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 23 செப்டம்பர், 2017

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்திற்காக அறிஞர் பெ. சு. மணியைச் சந்தித்த நினைவுகள்!

பெ.சு.மணி அவர்களின் நேர்காணலை ஒளிப்பதிவு செய்தல்...

     விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் படப்பிடிப்புகளை முடித்துக்கொண்டு, படத்தொகுப்பில் இருந்தநேரத்தில் படத்தில் ஒரு பற்றாக்குறை நிலவுவதை உணர்ந்தேன். காஞ்சிபுரத்தில் வாழும் தவத்திரு ஆத்மகனானந்த சுவாமிகளையும், அறிஞர் பெ. மணியையும் சந்தித்து, அவர்களின் நேர்காணலை ஆவணப்படத்தில் இணைக்கவில்லை என்றால் படம் முழுமையடையாது என்று அப்பொழுது நினைத்தேன்.

     விபுலாநந்த அடிகளார் வரலாற்றினை அறிந்த பெருமக்களுள் இவர்கள் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். முதற்கட்டப் படப்பிடிப்புக்கு நாங்கள் தயாரானபொழுதே அறிஞர் பெ. சு. மணியைத் தொடர்புகொண்டேன். உடல்நலம் பாதித்து, அவரின் சென்னை இல்லத்தில் ஓய்வில் இருந்தார். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் விவரத்தைச் சொன்னவுடன் எழுந்து அமர்ந்துகொண்டு, உரையாடினார். ‘தாம் இப்பொழுது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஒருமாதம் கழித்த பிறகு பேசிவிட்டு வருமாறும் அறிவுறுத்தினார். ஒருமாதம் கழித்தபிறகு நாளும் அவரைத் தொடர்புகொண்டும் பேச இயலவில்லை. சில மாதம் கழித்தே, அவர் புதுதில்லியில் தம் மகள் இல்லத்தில் இருக்கும் விவரம் அறிந்தேன். புதுதில்லியிலிருந்து திரும்பியதும் சந்திக்கலாம் என்று அறிஞர் மணி அவர்களின் அழைப்புக்குக் காத்திருந்தேன்.

     அந்தோ ! சில மாதங்கள் கழித்து மணி ஐயா அவர்களின் அருமைத் துணைவியார் இயற்கை எய்தினார் என்ற விவரம் அறிந்து வருந்தினேன். அவர் சென்னை திரும்புவதற்கு உரிய அறிகுறி எதுவும் தென்படவில்லை. மாதங்கள் சில  உருண்டோடின. நிறைவாக, காஞ்சிபுரம் தவத்திரு ஆத்மகனானந்த சுவாமிகளையாவது சந்தித்து, நேர்காணல் செய்து, ஆவணப்படத்தை முடித்துவிடலாம் என்ற முடிவோடு, சுவாமிகளிடம் உரையாட நேரம் கேட்டவண்ணம் இருந்தோம். அவர்களுக்கு இருந்த பல்வேறு பணிகளுக்கு இடையே நேரம் தர வாய்ப்பு அமையவில்லை, ஒரு நாள் திடுமெனச் சுவாமிகள் நேர்காணலுக்கு நேரம் ஒதுக்கினார்கள்

     விடுமுறை நாளொன்றில் புதுச்சேரியில் வைகறையில் புறப்பட்டு, காலை உணவு வேளைக்குக் காஞ்சிபுரம் சென்று சேர்ந்தோம். வழியிடையில் ஒரு கடையில் உண்டு முடித்தோம். சுவாமிகள் குறிப்பிட்ட நேரத்துக்குக் காஞ்சிபுரம் இராமகிருஷ்ண மிஷனின் தவப்பள்ளிக்குள் சென்றோம். எங்களின் வருகையை அறிந்த தவத்திரு ஆத்மகனானந்த சுவாமிகள் நேர்காணலுக்குத் தயாரானார்கள். அரைமணி நேரத்திற்கும் மேலாக விபுலாநந்த அடிகளாரின் சிறப்புகளைச் சுவாமிகள் நினைவுகூர்ந்தார்கள். தாம் இலங்கையில் அமைந்துள்ள இராமகிருஷ்ண மிஷனில் பணியாற்றிய பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார். எங்களுக்குத் தேநீர் தந்து அன்பொழுக விருந்தோம்பினார்.

     ஆத்மகனானந்த அடிகளாரிடம் உரையாடியபிறகு விடைபெற நினைத்தோம். அப்பொழுது பெ. சு.மணி ஐயா குறித்து, எங்களின் உரையாடல் திரும்பியது. தில்லியில் இருப்பதால் அவரின் செவ்வியை  இந்த ஆவணப்படத்தில் இணைக்கமுடியாத நிலையில் உள்ளதைக் கவலையுடன் சுவாமிகளிடம் நான் தெரிவித்தேன். அப்பொழுதுதான் பெ.சு.மணி அவர்கள் தம் மகள் இல்லத்தில் பெங்களூரில் தங்கியிருப்பதைத் தவத்திரு சுவாமிகள் குறிப்பிட்டார்கள். பெ.சு. மணி அவர்களின் தொடர்பு எண்ணையும் வழங்கியருளி ஆசி கூறினார்கள்.

     ஓராண்டாக நான் காத்திருக்கும் நிலையை அறிஞர் பெ. சு. மணி ஐயாவிடம் கூறினேன். இப்பொழுது தவத்திரு. சுவாமிகளுடன் உரையாடிய விவரத்தைக் கூறி, தாங்கள் அனுமதித்தால் இந்தநொடியே பெங்களூர் வர அணியமாக உள்ளேன் என்று கூறினேன். என் ஆர்வத்தை நன்கு உணர்ந்த மணி ஐயா, எங்களை அன்புடன் வரவேற்பதற்குப் பெங்களூரில் காத்திருக்கும் விவரத்தைச் சொன்னார். அவர்தம் மகளாரிடம் பெங்களூர் இல்ல முகவரியைப் பெற்றுக்கொண்டோம். காஞ்சிபுரம் சுவாமிகளும் எங்களுக்கு விடைகொடுத்தார்கள்.

     எங்கள் மகிழுந்து பெங்களூர் நோக்கி விரைந்தது. என் மாமனார் இல்லம் போகும் வழியில்தான் இருந்தது. அங்குச் சென்றால் நேரம் வீணாகும் என்று அதனைத் தவிர்த்தேன். ஆர்க்காடு, வேலூர், வாணியம்பாடி வழியாக எங்களின் பயணம் அமைந்தது. நாங்கள் வருவதைத் தெரிந்துகொண்ட வாணியம்பாடிப் பேராசிரியர் சிவராஜ் அவர்கள் எங்களுக்காகச் சிறப்பு உணவுக்கு  உரிய ஏற்பாடுகளைச் செய்தார். எங்கள் ஓட்டுநர் பஷீர் அவர்களும், ஒளி ஓவியர் செழியன் அவர்களும் புலவுச்சோற்றை உண்ணும் ஆர்வத்தில் மகிழ்ச்சியாக உரையாடியவாறு வந்தனர். சென்னை - பெங்களூர்ச் சாலை சீராக இருந்ததால் எங்களின் புதிய மகிழுந்து அமைதியாக முன்னேறிச் சென்றது.  வாணியம்பாடியை நெருங்கினோம். மகிழுந்தை ஓர் ஓரத்தில் நிறுத்திவிட்டு, புலால்  உணவினை நிறைவாக உண்டோம். விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்றவர் பேராசிரியர் சிவராஜ் என்பதைத் தமிழுலகு நன்கறியும். ஓட்டுநர் பஷீர் ஒர் வெள்ளைச்சட்டையைப் புதியதாக வாங்கிக்கொண்டு வந்தார். சீருடை இல்லை என்றால் பெங்களூர்க் காவல்துறையினர் தண்டம் விதிப்பார்கள் என்று கூறினார். வண்டியும் சாலையும் நேர்த்தியாக இருந்ததால் அதிவிரைவாக வண்டி ஓடியது. மாலை 6 மணியளவில் பெங்களூரில் உள்ள அறிஞர் பெ. சு. மணி அவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பை அடைந்தோம்.

     பெ.சு. மணி அவர்கள் என் முயற்சியை அறிந்து வியந்தார்கள். நெஞ்சாரப் பாராட்டினார்கள். என் நூல்களைப் பரிசளித்தேன். அயலகத் தமிழறிஞர்கள் நூலைப் பார்த்து. நெஞ்சம் நிறைந்து வாழ்த்தினார். இந்த நூலின் தேவையையும் சிறப்பையும் அப்பொழுதே மதிப்பிட்டு வியந்து - விதந்து ஓதினார் இந்த நூல் அச்சிட்ட வரலாறும், தமிழக அரசின் நூலகத்துறையின் ஆதரவு இல்லாததால் நூல் தேங்கிக்கிடக்கும் அவல நினைவும், என் வாழ்நாளில்  இனி நூல் அச்சிடுவது இல்லை; நிறுத்திக்கொள்வோம் என்று முடிவெடுத்ததையும் ஐயாவிடம் பகிர்ந்துகொண்டேன். எங்கள் உரையாடலையும், ஆவணப்படத்திற்கு உரிய செய்திகளையும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பதிவுசெய்துகொண்டோம். அறிஞர் பெ.சு. மணி ஐயாவின் குடும்பத்தினர் இரவு உணவு முடித்துச் செல்லுமாறு அன்பொழுக வேண்டினர். பின்பொருமுறை வருவதாக உறுதியளித்துவிட்டு இரவு எட்டுமணியளவில் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டோம்.

மு.இளங்கோவன், பெ.சு.மணி


     பெங்களூர் நகரம் இரவுப்பொழுதில் மின்விளக்குகளால் புதுக்கோலம் கொண்டிருந்தது. வெளிச்ச அழகைச் சுவைத்தவாறு பெங்களூரின் நடுநகர் கடந்து, புறநகர் வந்துசேர்ந்தோம்.  தமிழக எல்லையை அடைந்து, நள்ளிரவு திருப்பத்தூர் வந்து இரவு உணவு முடித்தோம். ஊர் அரவம் அடங்கிக் கிடந்தது. திருவண்ணாமலை வழியாக எங்கள் மகிழுந்து விடியல்பொழுதில் புதுச்சேரிக்கு வந்துசேர்ந்தது. அறிஞர் பெ. சு.மணி அவர்கள் பாரதியார் படைப்புகளிலும், விபுலாநந்த ஆய்வுகளிலும் தோய்ந்திருந்த பெரும்புலமையை அவரின் உரையாடல் எனக்கு உணர்த்தியது. தமிழாய்வுலகில் பின்பற்றத்தகுந்த ஆராய்ச்சி ஆளுமை பெ.சு.மணி என்று நவிரமலையில் ஏறி நின்று பெருங்குரலெழுப்பி உரக்கக் கூறுவேன்!

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தங்களின் முயற்சி போற்றுதலுக்குஉரியது ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உரிய நேரத்தில், உரிய முறையில் ஆவணப்படுத்தும் தங்களின் பாங்கு பாராட்டத்தக்கது. களப்பணி செல்வோர் உங்களின் குறிப்புகளையும், பதிவுகளையும் படிப்பது அவசியம்.