நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

நாவற்குடா இளையதம்பி தங்கராசா மறைவு!

நாவற்குடா இளையதம்பி தங்கராசா

     இலங்கையின் மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள நாவற்குடா ஊரில் பிறந்த இளையதம்பி தங்கராசா அவர்கள் தம் 84 ஆம் அகவையில் இன்று (22.08.2017) அதிகாலை 2.30 மணியளவில் கனடாவில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இவர்தம் பெற்றோர் அமரர் பத்தினியர் இளையதம்பி - பிள்ளையம்மா ஆவர்.

     விபுலாநந்த அடிகளார் உருவாக்கிய சிவாநந்த வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர். தங்கராசா அவர்கள் இலங்கை மத்திய வங்கியின் ஆய்வுத்துறையில் உயரதிகாரியாக 38 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.  தம் பணிக்காலத்தில் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதித் தம் மேலதிகாரிகளின் பாராட்டினைப் பெற்றவர். இலங்கைப் போர்ச்சூழலால் கனடாவுக்குக் குடிபெயர்ந்த இவர் தம் மகன்களுடன் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்.

                 தங்கராசா அவர்கள் கடந்த 2015 ஆம்  ஆண்டு" நான் என் அம்மாவின் பிள்ளை" என்ற புதினத்தை எழுதி, இரண்டு பாகங்களாக வெளியிட்டவர். 2008 இல்  மட்டக்களப்பு மாமாங்ககேசுவரப் பிள்ளையார் மான்மியம் என்னும் நூலினை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய பெருமைக்குரியவர். இருமொழிப் புலமைகொண்டவர் இவர் என்பதற்கு இந்த நூல்கள் சான்றாகும். மட்டக்களப்பு என்னும் தம் ஊரின்மீது அளப்பரிய ஈடுபாடுகொண்டு இவர் எழுதிய "நான் என் அம்மாவின் பிள்ளை" எனும் அரிய புதினம் என்றும் இவர்பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கும். எழுத்தாளராகவும், மாந்த நேயம்கொண்ட மனிதராகவும் பெருமை மிகு வாழ்க்கை வாழ்ந்த தங்கராசா அவர்கள் என்மீது அளப்பரிய அன்புகொண்டவர்.

நூல்வெளியீட்டு நிகழ்வு, கனடா(12.06.2016)

நூல்வெளியீட்டு நிகழ்வு, கனடா(12.06.2016)


     தங்கராசா அவர்களின் புதின நூல் வெளியீட்டு நிகழ்வுக்காக யான் கனடா சென்றிருந்தபொழுது, தம் இல்லத்துக்கு அழைத்து விருந்தோம்பி, நினைவாக யாழ்நூலைப் பரிசளித்து, விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாவதற்குத் தூண்டுகோலாக இருந்தவர். பேராசிரியர் இ.பாலசுந்தரம், தமிழ்த்தொண்டர் சிவம்வேலுப்பிள்ளை ஆகியோரின் தொடர்பால் அமைந்த தங்கராசா ஐயாவின் நட்பும், நினைவும் ஊழிதோறும் நீடித்து நிற்கும்.

     எங்களின் விபுலாநந்த அடிகளார் ஆவணப் படத்தைப் பார்த்து, எங்கள் முயற்சியை ஊக்கப்படுத்துவார்கள் என்று அதற்குரிய நாளுக்குக் காத்திருந்த வேளையில் தங்கராசா அவர்களின் திடீர் மறைவு எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்தது. அண்மைக்காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தங்கராசா அவர்களுக்கு உயர்தரமான மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டிருந்தும் மருத்துவம் பயனளிக்காத நிலையில் இன்று அவரின் ஆருயிர் பிரிந்தது.

     ஐயா தங்கராசா அவர்களைப் பிரிந்து வருந்தும் எங்கள் அன்னையார் சொர்ணம்மா தங்கராசா அவர்களுக்கும், அவர்களின் அருமை மகன்கள், மருமகள்கள், பெயரப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

     மீன்பாடும் தேன்நாடு தம் தவப்புதல்வருள் ஒருவரை இழந்து நிற்கின்றது!
தங்கராசா ஐயா குடும்பத்தாருடன் ...

நான் என் அம்மாவின் பிள்ளை புதினம் பற்றிய அறிய இங்கே செல்க!

கருத்துகள் இல்லை: