நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 16 பிப்ரவரி, 2017

புதுச்சேரியில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவு! ஊரன் அடிகளார் சிறப்புரை!


 தவத்திரு ஊரன் அடிகளார் உரை
புதுச்சேரியில் அமைந்துள்ள உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவு வரிசையில் இன்று(16.02.2017) வடலூர் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவுநர் முனைவர் ஊரன் அடிகள் சிறப்புரையாற்றினார். தொல்காப்பியமும் வள்ளலாரும் என்ற தலைப்பில் இவர் உரை அமைந்திருந்தது. சிறப்புரையில் தொல்காப்பியத்தின் சிறப்பினையும், தொல்காப்பிய நூற்பாக்களுக்கு வள்ளலார் வழங்கியிருந்த விளக்கத்தினையும் ஊரன் அடிகள் எடுத்துரைத்து, தமிழ் இலக்கியத்தில் தவறாகப் பதிவுபெற்றிருந்த முக்கியமான செய்தியை விளக்கித் தெளிவுப்படுத்தினார். ஐந்திரம் என்பதற்கு உரிய சொல் விளக்கமும், தொல்காப்பிய ஆய்வுகளைக் குறித்தும் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

தொல்காப்பியர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தி, தொல்காப்பியம் என்ற இலக்கண நூலை எழுதியுள்ளார். இந்த நூலில் இடம்பெற்றுள்ள பொருளதிகாரப் பகுதி எந்த மொழியிலும் இல்லாத வகையில் வாழ்வியல் இலக்கணத்தை எடுத்துரைக்கின்றது. எழுத்ததிகாரத்தில் ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் என்ற சொற்களுக்கு உரிய புணர்ச்சியைப் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடும் இடங்களில் உள்ள பொருத்தமின்மையை வள்ளலார் வழியில் ஊரன் அடிகள் இந்த உரையில் விளக்கினார். பாவாணர், மு. வரதராசனார் கருத்துகளையும், உரையாசிரியர்களின் கருத்துகளையும் துணையாகக் கொண்டு ஊரன் அடிகளார் உரையாற்றினார்.

தொல்காப்பிய மன்றப் பொறுப்பாளர்கள் ப. பத்மநாபன் வரவேற்புரையாற்றினார்; , மு.இளங்கோவன் அறிமுகவுரையாற்றினார்; பேராசிரியர் தெ. முருகசாமி தலைமையுரை வழங்கினார். இரா. கோவலன் நன்றியுரை வழங்கினார். பிரான்சிலிருந்து வருகை தந்த பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ சிறப்பிக்கப்பட்டார். தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த இலக்கணப் புலவர்களும் தமிழார்வலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தமிழாகரர் தெ. முருகசாமி தலைமையுரை
முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரை
மு.இளங்கோவன் அறிமுகவுரை
 அறிஞர் பெருமக்கள்

முனைவர் இரா.கோவலன் நன்றியுரை

 அறிஞர் பெருமக்கள்
அடிகளாரிடம் வாழ்த்தினைப் பெறுவோர்
பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ அவர்கள் சிறப்பிக்கப்படுதல்( முனைவர் இரா. நிர்மலா, ஈகியர் அப்துல் மஜீத்)
அடியார்கள் வாழ்த்தினைப் பெறுதல்

அடிகளாரின் உரையைக் கேட்க இங்கே அழுத்தவும்

கருத்துகள் இல்லை: