நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 18 அக்டோபர், 2016

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் இணையத் தமிழ் அறிமுகம்

பயிற்சியில் கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினர்


சத்தியமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனமான பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் இணையத்தமிழ் குறித்த பயிலரங்கம்17.10.2016 அன்று நடைபெற்றது. முத்தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற பயிலரங்கில் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் என அறுபதிற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்வமுடன் பயிற்சி பெற்றனர். முத்தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர் பேராசிரியர் மாலதி மகாலிங்கம் அவர்கள் வரவேற்று, நிகழ்ச்சி குறித்த நோக்கத்தினை எடுத்துரைத்தார். முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு, காலை அமர்விலும், பிற்பகல் அமர்விலுமாகச் சற்றொப்ப மூன்றரைமணி நேரம் தமிழ் இணைய வளர்ச்சி குறித்த செய்திகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்து அனைவரும் வலைப்பதிவில் எழுத வரும்படி வேண்டுகோள் விடுத்தார். தங்கள் துறைசார்ந்த செய்திகளை வலைப்பதிவில் பதிந்து வைக்கவேண்டியதன் தேவையை வலியுறுத்தியவுடன், பொறியியல் பயிலும் பல மாணவர்கள் தமிழில் வலைப்பதிவு செய்வதை அறிந்துகொண்டு, தங்கள் படைப்புகளை வலைப்பதிவில் பதிவுசெய்தனர்.

இணையத்தமிழ்ப் பயிலரங்கத்திற்கான ஏற்பாடுகளை செல்வி. யோக நந்தினி, செல்வன். தருண்குமார் உள்ளிட்ட முத்தமிழ் மன்றத்தின் மாணவப் பொறியாளர்கள் செய்திருந்தனர்.

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி கல்விக்கும் கட்டுப்பாட்டிற்கும் பெயர்பெற்ற கல்லூரியாகும்.  மிகச்சிறந்த கட்டடங்களும்,  ஆய்வுக்கூடங்களும்,  நூலகமும்விடுதிகளும், ஆசிரியர் குடியிருப்புகளும்,  தோட்டங்களும்,  சாலை வசதிகளும் கொண்டு சிறப்புடன் விளங்குகின்றது. சற்றொப்ப ஏழாயிரம் மாணவர்கள் கல்வி பயில்வதாக அறிந்தேன். ஒவ்வொரு ஆண்டும் இக்கல்லூரியில் மாணவர்கள் ஏற்பாடு செய்யும் பொங்கல் விழா குறிப்பிடத்தக்க ஒருநிகழ்வாக  நடைபெறுகின்றது.  பொறியியல் கல்லூரியில் தமிழ்ப்பற்றுடன் மாணவர்கள் விளங்கி, முத்தமிழ் மன்றத்தைச் சிறப்பாக நடத்துவதும் பொங்கல் விழாவை அனைவரும் உணர்வுபூர்வமாகப் பங்கேற்கும் விழாவாக மாற்றியிருப்பதும் பாராட்டிற்கு உரியனவாகும். இத்தகு பெருமைக்குரிய கல்வி நிறுவனத்தைச் சிறப்பாக நிர்வகித்து,  மாணவர்களின் கல்விக்கண் திறக்கும் கல்லூரியின் தலைவர் திரு.எஸ்.வி. பாலசுப்பிரமணியம் ஐயா நம் வணக்கத்திற்கும் பாராட்டிற்கும் உரியவர் ஆவார்கள்.
பார்வையாளர்(ஒருபகுதியினர்)

மு.இ. பயிற்சி


தொடக்க விழாவில்...

கருத்துகள் இல்லை: