நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 27 ஆகஸ்ட், 2016

விபுலாநந்தர் மறைவுக்கு உரைவேந்தர் ஔவை. சு.துரைசாமி பிள்ளை எழுதிய இரங்கற் பாக்கள்!




யாழ்நூல் தந்த விபுலாநந்தர் மறைவுச் செய்தி கேட்டுத் தமிழகத்தின் மிகச் சிறந்த அறிஞர்கள் கையற்றுக் கலங்கியுள்ளனர். அவர்களுள் உரைவேந்தர் ஔவை. சு. துரைசாமி பிள்ளை அவர்கள் எழுதிய பாக்கள் நெஞ்சை உருக்கும் பாடல்களாக உள்ளன. உரைவேந்தரின் உரைவளம் மாந்திய தமிழுலகம் அவரின் பாட்டமிழ்தம் பருகுவதற்குப் படியெடுத்து வழங்குகின்றேன்.

விபுலாநந்தரின் பன்முக ஆற்றலையும், பண்புநலன்களையும், பைந்தமிழ்ப் பணிகளையும் எடுத்துரைக்கும் உரைவேந்தர் அவர்கள் அகத்தியருக்கும் மேலான ஆற்றலுடையவராக விபுலாநந்தரைப் பரவிப் பாடுகின்றார். நம்மிடமிருந்து பிரித்து, விபுலாநந்தரைக் கொண்டு சென்ற கூற்றுவனை இகழ்ந்துபேச நம்மை அழைப்பதன் வாயிலாக அடிகளார் மேல் கொண்டிருந்த பற்றினை உரைவேந்தர் புலப்படுத்தியுள்ளார்.

வன்சொல்லால் கூற்றுவனை வையலாம் வம்மினோ
இன்சொல்லால் நம்மை இனிதளித்த- தென்முனிக்கு
மேலாம் அருள்விபு லானந்த மாமுனிவிண்
பாலாகச் செய்த பழிக்கு!

என்பது அப்பாடல்.

எண்ணாள ரென்கோமற்(று) எழுத்தாள ரென்கோ
இயலாய தமிழாளர் இசையாள ரென்கோ
கண்ணாளும் விஞ்ஞானக் கலையாள ரென்கோ
கருத்தாளும் செஞ்சொல்லின் கவியாள ரென்கோ
எண்ணாளும் இவ்வண்ணம் எண்ணிமகிழ்ந் தோமை
எண்ணியெண்ணிப் புண்ணாக இனிச்செய்த தந்தோ
தண்ணாளர் அருள்விபுலானந்தர் எங்கள் இறையைத்
தனிக்கொண்டு பிரிவித்த தறமில்லாக் கூற்றே

என்று பாடியுள்ளதில் ஒரு நுட்பம் உள்ளதைக் கவனிக்க இயலும். சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் அழகினைப் புகழும் கோவலன்,

மலையிடைப் பிறவா மணியே என்கோ
லையிடைப் பிறவா வமிழ்தே யென்கோ
யாழிடைப் பிறவா விசையே யென்கோ

என்று பாடுவான். அவ்வகையில் சிலப்பதிகாரத்தில் பேரீடுபாடுகொண்ட விபுலாநந்தரை உரிய சொல்லெடுத்து, “என்கோ” என்று உயர்த்திப் பாடியுள்ளமை உரைவேந்தரின் கலையுள்ளத்திற்குச் சான்றாக உள்ளது.


1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நாங்கள் அறிந்திராத இரங்கற்பாக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. விபுலானந்தர் என்றுதானே ஐயா இருக்கவேண்டும்?