நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 21 ஜூலை, 2016

அரியலூர்ப் புத்தகத் திருவிழா – 2016


திரைப்பா ஆசிரியர் அறிவுமதி அவர்கள் நூல்களை வெளியிட, மு.இளங்கோவன் பெற்றுக்கொள்ளும் காட்சி

 பேராசிரியர் க. இராமசாமி அவர்கள் திரைப்பா ஆசிரியர் அறிவுமதி அவர்களைச் சிறப்பிக்கும் காட்சி. அருகில் மு. இ.

தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கமும் இணைந்து அரியலூரில் புத்தகத் திருவிழாவை, சூலை 15 முதல் சூலை 24 வரை நடத்துகின்றனஅரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டுத் திடலில் நடைபெறும் இந்த விழாவில் தமிழகத்தின் முன்னணிப் பதிப்பகங்கள் தங்கள் நூல்களை விற்பனைக்கு வைத்துள்ளன. ஒவ்வொரு நாள் மாலையிலும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், அறிஞர்களின் சொற்பொழிவும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இந்த ஆண்டுப் புத்தகத் திருவிழாவில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்,  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் செ. மணியன், முதுமுனைவர் இரா. இளங்குமரனார், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அரங்க. பாரி, திரைப்படப் பாடலாசிரியர் பா. விஜய், முனைவர் சோ. சத்தியசீலன், கவிஞர் தங்கம். மூர்த்தி, மருத்துவர் சு. நரேந்திரன், பேராசிரியர் இரெ. குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

23.07.2016 மாலை பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது. நிறைவு விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். அந்த நாளில் திரைப்பட இயக்குநர்கள் வ. கௌதமன், மு. அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

19.07.2016 (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றியும் நூல்வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டும் சிறப்பித்தார். கானகன் புதினம் எழுதிச் சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருதுபெற்ற லெட்சுமி சரவணக்குமார் இந்த நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டார்.

திரைப்பா ஆசிரியர் கே. அறிவுமதி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கண்ணியம் இதழாசிரியர் முனைவர் ஆ. கோ. குலோத்துங்கன் எழுதிய நூல்களை வெளியிட்டும், மண்மணம் தவழும் சிறப்புரையாற்றியும் அவையினரின் பாராட்டினைப் பெற்றார்.


புரவலர் கதிர். கணேசன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பேராசிரியர் க. இராமசாமி, கு. இராஜபாண்டியன், பெ. மாரிமுத்து, வெ. இராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன. திருக்கோணம் கவிஞர் மூர்த்தி அவர்களின் கிராமியத் தென்றல் நிகழ்ச்சி அனைவரையும் இசை மழையில் நனைய வைத்தது.

மு.இளங்கோவன் சிறப்பிக்கப்படும் காட்சி

மு.இளங்கோவன் உரையாற்றும் காட்சி

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நிகழ்வுப்பகிர்வுக்கு வாழ்த்துகள், நன்றி.