நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 6 ஜூன், 2016

கனடாவில் தொல்காப்பிய முழக்கம்!



தமிழ்த்தாய் வாழ்த்துடன்...


  கனடா ஒண்டாரியோவின் தலைநகர் டொராண்டோவில் அமைந்துள்ள பெரிய சிவன்கோயில் அரங்கத்தில்  05.06.2016ஆம் நாள்(ஞாயிறு)  மாலை 5 மணி முதல் இரவு 10.30 மணி வரை உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் குத்துவிளக்கேற்றி, விழா தொடங்கிவைக்கப்பட்டது. முதல் நிகழ்வாகத் தொல்காப்பியப் பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

  கனடா டொரண்டோவின் தமிழ்க் கல்வித்துறை-அதிகாரி பொ. விவேகானந்தன் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளையின் தலைவர் சிவ. பாலு அவர்கள் தலைமையுரை வழங்கினார்.

  உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நெறியாளர் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பிய மன்றத்தின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து அவையினருக்கு அறிமுகம் செய்தார்.

  சிலம்பொலி சேத்திரா மாணவிகள் வரவேற்பு நடனத்தின் வழியாகத் தொல்காப்பியச் சிறப்பினை அவையினருக்கு நினைவூட்டினர்.

  சிங்கப்பூர் நன்யாங்கு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்கள் தொல்காப்பியம் குறித்தும், கல்விப்புலங்களில் அதனை அறிமுகம் செய்வது குறித்தும் பயனுடைய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

  தொல்காப்பியப் போட்டிகளில் கலந்துகொண்ட இளம் பருவத்து மாணவர்களுள் முதல்பரிசு பெற்ற மாணவர்கள் தொல்காப்பியர் பற்றியும் தொல்காப்பியம் பற்றியும் பேசிய பேச்சுகள் அவையினரை வியப்பில் ஆழ்த்தின.

  தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு தொல்காப்பியம் எண்ணுப்பெயர்களும் அளவைப்பெயர்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றிய தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணுப்பெயர்கள், அளவைப்பெயர்கள் குறித்த செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். அளவைப் பெயர்கள், எண்ணுப்பெயர்கள் குறித்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதைக் குறிப்பிட்டார். கழஞ்சு, உழக்கு, நாழி, கஃசு, பனை, தொடி, கலம், சாடி, தூதை, தினை, வட்டி, அகல், பதக்கு, தூணி, மண்டை பற்றி விரிவாக ஆராய்ந்தால் பல உண்மைகள் புலப்படும் என்று தெரிவித்தார்.

  இதழியல் துறை, திரைத்துறை, பண்பலை வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களும், பிறமொழி ஆதிக்கமும், புலம்பெயர் வாழ்க்கையும் தமிழைச் சிதைத்துவரும் இன்றைய சூழலில் தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ள மொழிக்காப்பு முயற்சிகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அறிய வேண்டும் என்று அவையினரைக் கேட்டுக்கொண்டார். தமிழ்ப்புலவர்கள் பிறமொழிக் கதைகள், சொற்களை ஆளும்பொழுது தமிழ் மரபுக்கு உட்பட்டு எழுதியுள்ளமைபோல் நாமும் தமிழ்மொழி மரபறிந்து எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் தமிழ்மொழியின் பேச்சு வழக்கு, எழுத்து வழக்குகளை ஆராய்ந்து தொல்காப்பியர் கண்டுரைத்த முடிவுகள் இன்றும் பொருந்தும்படி உள்ளதை அவையினருக்குச் சான்றுகாட்டி விளக்கினார்.

  கனடாவில் ஆசிரியர் பணியாற்றும் திரு. பொ. அருந்தவநாதன் அவர்களின் தொல்காப்பியர் வழி நாட்டாரிசை என்ற நிகழ்வு அவையினரை மிகவும் கவர்ந்த ஒரு நிகழ்வாகும். தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள நாட்டார் செய்திகளை எடுத்துரைத்துச் சான்றுகாட்டி, குழுவினருடன் திரு. அருந்தவநாதன் தம் கலைநிகழ்ச்சியை வழங்கியமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும். இந்த நிகழ்வு தமிழர்கள் பரவி வாழும் அனைத்து இடங்களிலும் நிகழ்த்தப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும்.

  திருமதி கௌசல்யா அவர்களின் சிவசக்தி நுண்கலைக்குழுவினர் மிகச் சிறந்த நாட்டிய நிகழ்வைத் தொல்காப்பியத்தைச் சிறப்பித்து வழங்கினர்.

  தொல்காப்பிய ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய விழா மலரை வெளியிட்டுப் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் அருட்தந்தையருமான ஜோசப் சந்திரகாந்தன் அவர்கள் உரையாற்றினார்.

  பேராசிரியர் பா. பசுபதி அவர்களின் தலைமையில் பயன்மிகு தொல்காப்பியம் என்ற தலைப்பில் கவியரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பேராசிரியர் பசுபதி அவர்கள் மரபுக்கவிதையில் பெரும்புலமை பெற்றவர் ஆதலால் சந்தக்கவிதை வழங்கி அனைவரின் இதயத்திலும் இடம்பிடித்தார். கவிஞர் அன்புடன் புகாரி தொல்காப்பியம் குறித்து வழங்கிய கவிதை அனைவரின் உள்ளத்தையும் ஈர்த்தது. அதுபோல் கவிஞர் சபா. அருள் சுப்பிரமணியம், தீவகம் வே. இராசலிங்கம் ஆகியோர் சிறப்பான கவிதைகளை வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.

  உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனாடக் கிளையின் செயலாளர் திருமதி கார்த்திகா மகாதேவன் அவர்களின் நன்றியுரைக்குப் பிறகு விழா இனிது நிறைவுற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
  
தமிழை வணங்கும் அவையினர்

சிவ.பாலு, மு.இளங்கோவன், பேராசிரியர் இ.பாலசுந்தரம்

தொல்காப்பியத்தை முழங்கும் மாணவர்

பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்களின் உரை

தொல்காப்பியப் பரிசில் பெற்ற தமிழ்ச்செல்வங்கள்

தொல்காப்பியம் பெருமை உரைக்கும் நாட்டியம்

பரிசு வழங்கும் திருமதி பாலசுந்தரம்

பார்வையாளர்கள்



தொல்காப்பிய இசைமுழக்கம்

மு.இளங்கோவன் உரை

பேராசிரியர் பசுபதி, அன்புடன் புகாரி உள்ளிட்ட நண்பர்களுடன்..

அன்புடன் புகாரி அவர்களின் கவிதைச்சாரல்...

உதயன் ஆசிரியர் பரிசு வழங்கல்

பேராசிரியர் சந்திரகாந்தன் பரிசு வழங்கிய காட்சி

தொல்காப்பியப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு 
மு.இளங்கோவன் பரிசு வழங்கும் காட்சி

கருத்துகள் இல்லை: