நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

தமிழ்த்தொண்டர் இராம. பெரிகருப்பனார்!


இராம. பெரிகருப்பன், மெய்யம்மை ஆச்சி
நிறுவுநர், இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி

தொடர்வண்டிகளின் நேரத்தைக் கணக்கிட்டு, அதற்கு வாய்ப்பாகப் பயணத்தை இப்பொழுது  அமைத்துக்கொள்கின்றேன். அப்படித்தான் அன்று விழுப்புரம் தொடர்வண்டிச் சந்திப்பில் பல்லவன் தொடர்வண்டிக்குக் காத்திருந்தேன். ஒரு பழைய நூலகத்தில் புகுந்து, அரிய நூல்களைப் படித்துக் கருத்து முத்துகளைப் பெறுவதுபோல் அருகிலிருந்த பேராசிரியர் தெ. முருகசாமியின் உரையாடலில் அரிய செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

இராம. பெரியகருப்பன் செட்டியாருக்கு இந்த அளவுக்குத் தமிழ்ப்பற்று உருவாவதற்குக் காரணம் யாது? என்று பேராசிரியரை வினவினேன்.

பள்ளிப்பருவத்தில் அவருக்கு ஆசான்களாக இருந்த வித்துவான் க. தேசிகன், புலவர் இராமசாமி ஆகியோரின் ஊக்கத்தால் தமிழ்ப்பற்றுடையவராக நம் செட்டியார் அவர்கள் விளங்கினார்கள். கல்லூரிப் பருவத்தில் கணக்குப் பாடத்தைப் பட்டப் பேற்றுக்காகப் படித்தாலும் தனித்தமிழ் இயக்கக் கருத்துக்களில் மறைமலையடிகளார், பாவாணர்பெருஞ்சித்திரனார் கொள்கைகளில் ஈடுபட்டு நல்ல தமிழ்த்தொண்டராக நாளும் விளங்கினார் என்று மேலும் மொழிந்தார்.

தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார்மேல் திரு. செட்டியார் அவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. எனவே தம் மயிலாடுதுறை இல்லத்துக்கு நீலாம்பிகையம்மையார் இல்லம் என்று மறைமலையடிகளின் மகளார் பெயரை இட்டு வழங்கினார். தாம் வாழ்ந்த காரைக்குடி இல்லத்துக்குத் திரு. வி. . இல்லம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஈரோட்டு இல்லத்துக்குப் பாரதி நிலையம் என்று பெயர் அமைத்தார் என்று அருவிபோல் முருகசாமி ஐயா, பெரியகருப்பன் செட்டியாரின் புகழைக் கொட்டி முழக்கினார்.

இராமசாமி தமிழ்க்கல்லூரி என்னும் பெயரில் தமிழ்க்கல்லூரி நிறுவும் அளவுக்குத் தமிழ்ப்பற்று செட்டியார் அவர்களுக்கு எப்படி அமைந்தது? இது என்னுடைய அடுத்த வினா?

பெரியகருப்பன் செட்டியார் அவர்கள் நாளும் ஒரு நூல் படிப்பது வழக்கம். தமிழ் ஆங்கில நூல்களை ஆர்வமுடன் பயின்றார். அவ்வாறு பயின்ற நூல்களுள் உ. வே. சாமிநாத ஐயரின் வாழ்க்கை வரலாறு, கரந்தைத் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு பெரியகருப்பனாரின் நெஞ்சைப் பெரிதும் கவர்ந்தனவாகும். எனவே, இவர்களைப் போல் தமிழுக்கு ஏதேனும் தொண்டு செய்ய வேண்டும் என்று விரும்பினார். இதற்கு வாய்ப்பாகக் காரைக்குடியில் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் பணியாற்றியபொழுது அவரின் தொடர்பு செட்டியார் அவர்களுக்குக் கிடைத்தது. தமிழ்க்கல்லூரியைத் தொடங்கும்பொழுது கல்லூரிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று திரு. செட்டியார் நினைத்தபொழுது மூன்று இராமசாமிகளை மனத்தில் நினைத்துக் கல்லூரிக்குப் பெயர் வைத்தார். ஒருவர் ஈரோட்டுப் பெரியார் இராமசாமி; இனொருவர் தம் வகுப்பு ஆசிரியர் இராமசாமி; மற்றொருவர் தம் வளர்ப்புத் தந்தை இராமசாமி.

மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம் அவர்களின் நெறிகாட்டலில் இந்தியப் பல்தமிழ்க் கழகம் என்ற தமிழ் அமைப்பைப் பெரியகருப்பன் செட்டியார் முதலில் உருவாக்கினார். தமிழ் கற்க விரும்புவோர்க்கு முறைசாராக் கல்வி என்ற வகையில் தமிழ் படிக்க இந்த அமைப்பு உதவியது. ஈராண்டு தமிழ் பயின்றவர்களுக்கு இளமணி என்றும், நான்காண்டுகள் தமிழ் பயின்றவர்களுக்கு முதுமணி என்றும் பட்டங்களை அக்காலத்தில் வழங்கினர். தொடக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த அமைப்பு பின்னாளில் தேக்கம் பெற்றது. எனவே இதனைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புப் பெற்ற கல்லூரியாக்க நினைத்து 18.06.1967 இல்  இராமசாமி தமிழ்க் கல்லூரியைச் செட்டியார் அவர்கள் உருவாக்கினார் என்று தெ. முருகசாமி மேலும் குறிப்பிட்டார்.

இராமசாமி தமிழ்க்கல்லூரியில் பேராசிரியர் செல்வத்தாண்டவன், பேராசிரியர் ந. இராமநாதன் ஆகியோருடன் தாமும் முதல்வராகப் பணியாற்றிய அக்காலங்களை அசைபோடுவதற்கும் தொடர்வண்டி காரைக்குடி நோக்கி முன்னேறுவதற்கும் சரியாக இருந்தது.

இராம. பெரியகருப்பன் செட்டியார் தமிழ் படிக்கும் மாணவர்கள் தமிழ்ப்பாடத்துடன் இசை, சித்த மருத்துவம், நாடகம், தட்டச்சு உள்ளிட்ட தொழில்நுட்ப அறிவு, அறிவியல் அறிவு, பிறமொழி அறிவு பெற வேண்டும் என்று முற்போக்கு எண்ணம் உடையவாரக விளங்கியதையும் பேராசிரியர் தெ.மு. எடுத்துரைத்தார்.

திரு.செட்டியார் அவர்கள் கல்லூரி நிறுவவும் தமிழுக்குச் செலவிடவும் அவர்களுக்கு வருவாய் எவ்வாறு அமைந்தது? என்று அடுத்து வினவினேன்.

சிங்கப்பூர் நாட்டில் வட்டிக்கடை நடத்திப் பொருள் நிலையில் முன்னேற்றம் கண்டவர் எனவும், தம் பொருளைத் தமிழுக்குச் செலவிடுவதில் பேரார்வம் கொண்டிருந்தவர் எனவும் தெ.முருகசாமி குறிப்பிட்டார். இறைநெறிக் கருத்துகளில் மிகுந்த பற்றுடையவர் என்றாலும் பகுத்தறிவாளர்களை உயர்வாகப் போற்றியவர் நம் செட்டியார் என்று கூறியதும் செட்டியார் அவர்களின் மேல் பற்றும் மதிப்பும் எனக்கு உருவானது. சிங்கப்பூருக்குத் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் பயணம் செய்தபொழுது வரவேற்றது முதல் வழியனுப்பியது வரை உடன் இருந்தவர் என்றார். மேலும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் சிங்கப்பூர் சென்றபொழுது நம் செட்டியார் அவர்களின் விருந்தோம்பலில் இருந்துள்ளதையும் நினைவுகூர்ந்தார். காரைக்குடியில் பெரியார் சிலை நிறுவியபொழுது குறிப்பிட்ட தொகையைத் திரு. செட்டியார் அவர்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். மேலும் பெரியார் நூற்றாண்டு விழாவைக் காரைக்குடியில் நடத்த முனைந்தபொழுது மற்றவர்கள் இடந்தரத் தயங்கியபொழுது, தம் கல்லூரி வளாகத்தை அன்புடன் கொடுத்து விழா நடக்க உதவிய பெருமைக்குரியவர் என்று அறிந்தபொழுது அவர்மேல் அன்பும் மதிப்பும் எனக்குக் கூடிக்கொண்டே இருந்தது.

திருமுறைகளை ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் ஓதுவதற்கு, ஓர் ஓதுவாரை வரச்செய்து பாடச் செய்து, பொருட்கொடை வழங்குவது செட்டியார் அவர்களின் வழக்கமாம். ஒருமுறை பேராசிரியர் நடேச முதலியார் அவர்களைத் திருவாசகம் பொழிவாற்ற அழைத்து, மூன்றுநாள் பொழிவு முடிந்த பிறகு அவருக்கு வெள்ளித்தட்டில் ஐந்தாயிரம் மதிப்புத்தொகை வைத்து, திரு.செட்டியார் அவர்களும், ஆச்சியார் அவர்களும் பேராசிரியர் அவர்களின் திருவடிகளை வணங்கினார்கள் என்று கூறியதும், செட்டியார் அவர்களின் திருவாசகப் பற்றை ஒருவாறு உணர்ந்தேன்.

 இராம. பெரியகருப்பன் செட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், தமிழ் இலக்கிய உலக நிகழ்வுகளையும் உரையாடியபடி நள்ளிரவு நாங்கள் காரைக்குடியை அடைந்தோம். தொடர்வண்டி நிலையத்தில் இறங்கியதும் எங்களை எதிர்கொண்டு அழைப்பதற்குப் பேராசிரியர் நாகநாதன் காத்திருந்தார். அவரின் மகிழ்வுந்தில் விடுதிக்குச் சென்று, கண்ணயர்ந்தோம். காலையில் எழுந்து கடமைகளை முடித்துக்கொண்டு முதலில் பெரியகருப்பன் செட்டியார் அவர்கள் வாழ்ந்த திரு.வி. . இல்லம் சென்றோம். இத்தாலிநாட்டுக் கல்லால் அமைந்த பளிங்குத் தூண்களும், பாரிய கதவுகளும், அதற்குரிய பூட்டும், திறவியும், வேலைப்பாடு அமைந்த நிலைகளும் கண்டு வியப்புற்றேன். இவை யாவும் செட்டியார் அவர்களின் செல்வம், செல்வாக்கு காட்டும் சான்றுகளாகக் கண்முன் தெரிந்தன. பலகட்டுகளாகஇருந்த இல்லத்தின் கல்யாணக்கட்டு என்ற பகுதிக்குச் சென்றோம். அங்குதான் பெரியகருப்பன் செட்டியார் அவர்கள் இறைவழிபாடு செய்யும் பகுதியும், அலுவல்களை அமர்ந்து பார்க்கும் பகுதியும் இருந்தன.

பரந்து விரிந்த இல்லத்தின் சுவர்களையும் அதில் மாட்டப்பெற்றிருந்த புகைப்படங்களையும் பார்த்தேன். பூண்டி அரங்கநாத முதலியார், கால்டுவெல், போப் அடிகளார், விபுலானந்தர், உமாமகேசுவரம் பிள்ளை, .மு. வேங்கடசாமி நாட்டார், வீரமாமுனிவர், தனிநாயகம் அடிகளார் உள்ளிட்டோர் படங்கள் அழகுற மாட்டப்பெற்றிருந்தன.

மாளிகையின் ஒருபகுதியில் பெரியகருப்பன் செட்டியார் நாளும் வழிபடும் இறையுருவப் படங்கள் இருந்தன. அவற்றுக்கும் மேல் தவத்திரு. மறைமலையடிகளார் படம் இருந்தமை எனக்குச் செட்டியார் மேல் மிகுந்த மதிப்பை உண்டாக்கியது. தாம் வழிபடும் கடவுளுக்கு இணையாக, இன்னும் உண்மையுரைப்பின் கடவுளருக்கு மேலாக நம் மறைமலையடிகளார் படத்தைப் பொருத்தியிருந்ததைப் பார்த்து, பெரியகருப்பன் செட்டியாரின் தமிழ்ப்பற்றை எண்ணி எண்ணி உவந்தேன்.

பெரியகருப்பன் செட்டியாரின் இறுதி வாழ்க்கை எவ்வாறு அமைந்து? என்று வினவினேன்.

செட்டியார் அவர்கள் மலேசியா சென்றிருந்தபொழுது நடைபெற்ற ஒரு மகிழ்வுந்து நேர்ச்சியில் இறந்தார் என்ற செய்தியை அறிந்து வருந்தினேன். நல்ல தமிழ்த்தொண்டர் ஒருவருக்கு இறப்பு இவ்வாறு நேர்ந்ததே என்று கவலையுற்றேன்.

இராம. பெரியகருப்பன் செட்டியார் அவர்கள் 07.09.1930 இல் காரைக்குடியில் பிறந்தவர். பெற்றோர் வீ. பெரியகருப்பன் - மீனாட்சி ஆச்சி ஆவர். குடும்ப மரபின்படி இரண்டாவதாகப் பிறக்கும் ஆண் குழந்தைக்குப் பெரியகருப்பன் என்று பெயர் வைக்கும் வழக்கப்படி இவருக்குத் தந்தையாரைப் போல் பெரிய கருப்பன் என்று பெயர் வைக்கப்பெற்றது. தம் பெரியப்பா இராம. வீர. இராமசாமி செட்டியாருக்கு ஆண்குழந்தை இல்லாததால் பெரியப்பாவின் வளர்ப்பு மகனாக வந்ததால் இராம. பெரியகருப்பன் என்னும் புகழ்ப்பெயரைக் கொண்டார்.

இராம.பெரியகருப்பன் செட்டியார் பள்ளிப்படிப்பைக் காரைக்குடியிலும் அருகிலுள்ள அமராவதி புதூரிலும் பெற்றார். உயர்கல்விக்குத் திருச்சியில் அமைந்துள்ள தூய வளனார் கல்லூரியைத் தேர்ந்தெடுத்து, அங்குப் புகுமுக வகுப்பில் இணைந்து பயின்றார். பின்னர்க் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இணைந்து இளமறிவியல் கணிதம் பயின்றார். பட்டப்படிப்பு முடிந்ததும் சிங்கப்பூர் சென்று தம் குடும்பத்தின் வட்டிக்கடையில் கைபழகித் தொழிலை வளர்த்தார். சிங்கப்பூரில் தம் கடைப்பெயரைத் தமிழில் அமைத்தவர். தமிழ்க்கல்லூரி கண்டவர். தம் தாயாரின் பெயரில் அறக்கட்டளை அமைத்து, நல்லறிஞரை அழைத்து, உரையாற்றச் செய்து அவர்தம் பொழிவை நூலாக்கித் தமிழ்த்தாயினுக்கு அணிகலனாக அமைத்தவர். மறைமலையடிகள் நூற்றாண்டின் பொழுது அவர் பெயரில் பிள்ளைத் தமிழ்ப் போட்டி வைத்து, பாவலர்களை எழுதச் செய்து, தக்கவரைத் தேர்ந்தெடுத்து ஐயாயிரம் பரிசு வழங்கிப் பாராட்டியவர். அபிராமி அந்தாதி நூலை உரையுடன் வெளியிட்டவர். தம் பூசை அறையில்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் (605)

என்னும் திருக்குறளைப் பெரிய எழுத்தில் அச்சிட்டு வைத்து, அதனைக் கற்று ஒழுகினார். காட்சிக்கு எளியராகவும், கடுஞ்சொல் இல்லாதவராகவும் விளங்கிய இராம. பெரியகருப்பனார் திருவனந்தபுரம் கல்லூரிக்கு நூலகம் அமைக்க நிதிக்கொடை வழங்கியவர். பெரியகருப்பனாரின் பெரும்புகழை மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்கள்,

 பிறப்பறியாத் தமிழன்னை பெற்ற மைந்தன்
பேராற்றல் பெருங்கருப்பன் பிறவி அன்பன்
மறப்பறியாக் கொடையாளன் இராம சாமி
மாண்புசால் குலமுதல்வன் தந்தை பேரால்
சிறப்பறியாத் தெய்வநிகர் மொழிதான் வாழச்
செந்தமிழ்க்குக் கல்லூரி செவ்வன் கண்டான்
நிறப்பறியாக் கடல்போல நெடிது நின்று
நெஞ்சினிய மொழித்தொண்டு பரப்பி வாழி!

என்று போற்றிப் பாடினார்.

காரைக்குடியில் உள்ள இராமசாமி தமிழ்க்கல்லூரியின் புகழ்வரலாற்றின் முதற்பக்கத்தில் இராம. பெரியகருப்பனாரின் திருப்பெயர் என்றும் எழுதப்பெறும்.


தமிழ்த்தொண்டர் இராம. பெரியகருப்பனாரின் நீடுபுகழ் நிலைபெறட்டும்!


3 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

போற்றுதலுக்கு உரியவர்
போற்றுவோம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நெடுநாள் கழித்து மறுபடியும் அறிஞர் அறிமுகம் கண்டேன். இராம பெரியகருப்பனாரைப் பற்றி அறியாதன அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி.

thiruvarul சொன்னது…

பேராசிரியர் அவர்களுக்கு முதலில் அன்பும், பணிவும் நன்றியும் கலந்த வணக்கம். எங்கள் கல்,லூரி நிறுவுநர் செந்தமிழ்ச்செல்வர் பெரிய கருப்பனாரைப் பற்றிய அருமையான பதிவு. பயண இலக்கியமா? வரலாறா? ஆய்வுக் கட்டுரையா? என வியக்கும் வண்ணம் நுட்பமான செய்திகளை செறிவாக அளித்துள்ளீர்கள். தன் அனுபவங்களைப் பொது அனுபவங்களாகப் பதிவேற்றும் பணி அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் பல பணிச்சுமைகளுக்கு இடையில் தாங்கள் செய்துள்ள பணி அரும்பணி. ஆற்றொழுக்குப் போன்று படிப்பதற்கு இலகுவான மொழிநடை . ஏறக்குறைய கல்லூரி யோடு தொடர்புடைய எல்லாச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. பண மே முதல் என்ற பொருள் முதல்வாதம் கோலோச்சும் இன்றைய இந்தியக் கல்வி வணிகச் சூழலில் தமிழ்நாட்டில் துவக்கப் பெற்ற தமிழ்க் கல்லூரிகள் கலை அறிவியல் கல்லூரிகளாகத் தங்களை முகம் மாற்றிக் கொண்டு விட்ட சூழலில் உலக அளவில் இன்றளவும் தனித் தமிழ்க் கல்லூரியாக காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி மட்டுமே திகழ்கின்றது. பல்கலைக்கழகம் நிர்ணயித்துள்ள கட்டணம் தவிர வேறு எந்தக் கட்டணமும் கிடையாது. தந்தையாரின் எண்ணப்படியே தமிழ் வளர்ச்சி மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கல்லூரியை நிர்வகிக்கும் அவர்தம் பிள்ளைகளும் வணங்கத்தக்கவர்களே. கல்லூரி பொன்விழா நெருங்கி வரும் சூழலில் அருமையான பதிவு.மீண்டும் நன்றி ஐயா- செ. நாகநாதன்,