நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 13 மே, 2014

திருவையாறு அருகே நல்லேர் பூட்டும் விழா


கோடைமழை பெய்ததைத்தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே பருத்திக்குடி கிராமத்தில் நல்லேர் பூட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் நல்லேர் பூட்டி வேளாண்மைப் பணிகள் தொடங்குவது வழக்கம். இந்த வழக்கம் பல சிற்றூர்களில் மறைந்து விட்டாலும், சில சிற்றூர்களில் இன்னும் தொடர்கின்றன.

கடந்த வாரம் கோடைமழை பெய்ததைத் தொடர்ந்து, சித்திரை மாத வளர்பிறையையொட்டியும், திருவையாறு அருகேயுள்ள பருத்திக்குடி கிராமத்தில் நல்லேர் பூட்டும் விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
இதற்காக மாடுகளுக்குச் சந்தனப் பொட்டு வைத்தும், விளைநிலத்தில் பூசைகள்  நடத்தப்பட்டன. பின்னர், கலப்பையில் மாட்டை பூட்டி உழவு செய்யப்பட்டது.

வேளாண்மைக்குப் பயன்படும் நெல், பயறு, எள் போன்ற தானியங்களைத் தெளித்தனர். இதில், விவசாயிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி இராசேந்திரன் கூறுகையில், ஆண்டுதோறும் நல்லேர் பூட்டும் விழா நடைபெற்று வருகிறது. இதன்மூலம் விவசாயப் பணிகளைத் தொடங்கி நிலத்தை உழவு செய்யப்படும். தென் மேற்கு பருவமழை, மேட்டூர் அணை நீர் திறப்பைப் பொருத்து குறுவை சாகுபடியைத் தொடங்குவோம். இல்லாவிட்டால் ஆழ்குழாய் மூலம் சாகுபடி மேற்கொள்வோம் என்றார்.

நன்றி: படமும் செய்தியும் தினமணி நாளிதழ் 13.04.2014

கருத்துகள் இல்லை: