நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 2 மே, 2014

தமிழிசைத் தேடலில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் எனக்கு அறிமுகமான வரலாறு…


பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை படிக்கும்பொழுது(1987-90) சிலப்பதிகாரம் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. சிலப்பதிகாரத்தை இசைநுட்பம் அறிந்தவர்கள் வாயிலாகப் படிக்க வேண்டும் என்று அப்பொழுது பேராசிரியர்கள் குறிப்பிடுவார்கள். சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள அரங்கேற்று காதையை நடத்தும் பேராசிரியர் அதில் உள்ள இசை, நாட்டியம் குறித்த பகுதிகளை விளக்கும்பொழுது முழுவதும் விளக்க இயலாமல் இடர்ப்பட்டதை உணர்ந்தேன்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இசை நுட்பங்களையும் மரபுகளையும் உணரமுடியாமல் ஓர் இடைவெளி இருந்ததால் அத்தகைய தடுமாற்றம் மிகப்பெரும் சான்றோர்களுக்கே இருந்தது. அதனால்தான் என் இசைப்பேராசான் முனைவர் வீ. ப. கா. சுந்தரம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுவார். ”சிலப்பதிகாரத்தைப் பத்தாண்டுகள் தொடர்ச்சியாகப் படித்த பிறகுதான் ஓரளவு விளங்கிற்று. அறுபதாண்டுகளாகத் தொடர்ச்சியாகப் படித்த பின்பும் இன்னும் பல இடங்கள் விளக்கம்பெற வேண்டியுள்ளது” என்பார்கள்.

சிலப்பதிகாரத்தின் பழைய உரை, அடியார்க்குநல்லார் உரை இவற்றைப் படித்தபொழுது சிலப்பதிகாரத்தின் இசைநுட்பமும் அதன் சிறப்பும் எனக்கு ஓரளவு தெரியத் தொடங்கியது. சிலப்பதிகாரத்தின் பதிகத்திற்கு அடியார்க்கு நல்லார் வரைந்துள்ள உரைக்குறிப்புகள் இசைவரலாற்றில் குறிப்பிடத்தக்க பெருமைக்கு உரியன. சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுகாதை முழுவதும்(175 அடிகள்) அப்பொழுது எனக்கு மனப்பாடம்.

அப்பொழுதுதான் குடந்தை ப.சுந்தரேசனார் என்ற பெயர் எனக்கு அறிமுகம் ஆனது. ஆனால் குடந்தை பசுந்தரேசனார் அப்பொழுது உயிருடன் இல்லை. சிலப்பதிகாரத்தைக் குடந்தை ப. சுந்தரேசனார் பாடியும், நடித்தும் காட்டி விளக்குவார் என்று அவருடன் பழகியவர்கள் குறிப்பிட்டனர். அதனால் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களுடன் பழகியவர்களைக் கண்டு உரையாடும் வேட்கையுடன் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகப் பலருடன் பழகியுள்ளேன். அவர்கள் வாயிலாகக் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் இசைப்புலமையை ஓரளவு புரிந்துகொண்டேன்.

நாகைத் தமிழ்ச்சங்கத்தில் சுந்தரேசனார் சிலப்பதிகார உரை நிகழ்த்தியபொழுது அவரிடம் பாடம் கேட்ட ஆ. பிழைபொறுத்தான் வழியாகச் சுந்தரேசனாரின் இசைப்புலமை எனக்கு அறிமுகமாகத் தொடங்கியது. அந்த நாகை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கவிஞர்கோ கோவை இளஞ்சேரன் ஐயா அவர்களை அவர்களின் தஞ்சை இல்லத்தில் சென்று கண்டேன்(1992). குடந்தை சுந்தரேசனாரின் ஒலிவட்டுகள் இருக்கும் என்று நினைத்துச் சென்றேன். ஏமாற்றமே கிடைத்தது. ஆனால் கோவை இளஞ்சேரனார் சிலம்பின்மேல் மேலும் ஆர்வம் உண்டாகும்படி உரையாடினார்.

குடந்தையில் வாழ்ந்த கதிர். தமிழ்வாணன் வழியாகவும் சுந்தரேசனார் அவர்களின் இசைப்புலமையை உள்வாங்க முடிந்தது. கதிர் ஐயா வழியாகவும் அக்குறிப்புகளைப் பதிந்துவைக்கமுடியாமல் போனது. அடுத்து நெய்வேலியில் இருந்த பாவாணர் தமிழ்க்குடும்ப அன்பர்கள் வழியாகவும் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களைப் பற்றி அறிந்தேன். பொறியாளர் அறவாழி அவர்கள் பல குறிப்புகளைச் சொன்னார்கள். திரு. அன்புவாணன் வெற்றிச்செல்வி அவர்கள் சுந்தரேசனாரின் சில ஒலிப்பேழைகள், நூல்கள் ஆகியவற்றை வழங்கினார்கள். மதுரையில் வாழும் மூத்த தமிழறிஞர் ஐயா தமிழண்ணல் அவர்களிடம் இருந்தும் சில ஒலிநாடாக்களை வாங்கிவந்து குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழிசையைப் பருகினேன். திருத்தவத்துறை அன்பர்கள் வெளியிட்ட ஒலிவட்டுகளை ஐயா ஆ. பிழைபொறுத்தான் கொண்டுவந்து தந்து உதவினார்கள். நண்பர் ப. திருநாவுக்கரசு அவர்களும் எனக்குப் ப. சு. ஐயாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இசைமேதை வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் உதவியாளனாக நான் இருந்து தமிழிசைக் கலைக்களஞ்சியத்தின் நான்காம் தொகுதியை எழுதிக்கொண்டிருந்தபோது வீ.ப.கா.சுந்தரனார் நம் பண்ணாராய்ச்சி வித்தகர் ப. சு. ஐயா அவர்களைப் பற்றி நிரம்பச் சொல்வார்கள். அவர்களின் பாடுதுறை ஆற்றலை விளக்குவார்கள்.

என் பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி அவர்கள் வழியாகவும் குடந்தை ப.சுந்தரேசனாரின் தமிழிசைச் சிறப்பை உரையாடல்களில் கேட்டு மகிழ்ந்ததுண்டு. தஞ்சைப் பேராசிரியர் முனைவர் மு.இளமுருகன் ஐயாவைச் சந்திக்கும்பொழுதெல்லாம் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களை அழைத்துச் சென்று அவரின் பிறந்த ஊரான வடுவூரில் (தஞ்சை மாவட்டம்) உரை நிகழ்த்தச் செய்தமையைக் கூறி ஐயாவின் மேல் உயர்ந்த மதிப்பு ஏற்படும்படி செய்தார்கள்.

சூலூர் பாவேந்தர் தமிழ்ப்பேரவையின் நிறுவுநர் புலவர் செந்தலை கௌதமன் அவர்கள் தம்மிடம் இருந்த சுந்தரேசனாரின் ஒலிவட்டுகளைக் கிடைக்கும்படி செய்தார்கள். கோவை கு.வெ.கி. ஆசான் அவர்களின் திருமகனார் திரு. கு.வெ.கி. செந்தில் அவர்களும் ஒருமணிநேரம் ஒடும் ஓர் ஒலிவட்டைத் தந்தார்கள்.

ஆடுதுறை துணிவணிகர் திரு வி. வயித்தியலிங்கம் அவர்களைப் பலவாண்டுகளுக்கு முன்பே கண்டு பழகியுள்ளேன். அதன் பிறகு அண்மையில் சிதம்பரத்தில் கண்டு உரையாடி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அழைத்துச்சென்று பேராசிரியர் முனைவர் அரங்க. பாரி அவர்களின் தமிழ்த்துறை அலுவலகத்தில் ஒருமணி நேரம் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும்படிச் செய்து காணொளியில் பதிவுசெய்துள்ளேன்.

திருமழபாடி, அரியலூர் பகுதிகளில் சுந்தரேசனார் தொடர்ப்பொழிவுகள் செய்த வரலாற்றை அறிந்து திருமழபாடி புலவர் திருநாவுக்கரசு, முனைவர் அ. ஆறுமுகம், அரியலூர் சுவை. மருதவாணன் உள்ளிட்ட புலவர்களைச் சந்தித்து ப.சு. ஐயா பற்றிய குறிப்புகளைத் திரட்டினேன். அதுபோல் திருத்தவத்துறை திரு. சிவப்பிரகாசம் அவர்களை நான் முனைவர் பட்டம் படித்தபொழுது கண்டு உரையாடியும் ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துள்ளேன். அண்மைக்காலமாகவும் திருத்தவத்துறை அன்பர்கள் வழியாகச் செய்திகளை அறிந்து வருகின்றேன். திருவரங்கம் செண்பகத் தமிழ் அரங்கு இராச. இளங்கோவன் அவர்களும் பல நிலைகளில் எனக்குத் துணைநின்று ப.சு. அவர்களைப் பற்றி அறிய உதவி வருகின்றார்.

சேலம் புலவர் வேள்நம்பி அவர்கள் வழியாகவும், சிலம்பொலி செல்லப்பன் ஐயா வழியாகவும், பேராசிரியர் வயித்தியலிங்கன் வழியாகவும் பல செய்திகளை அறிந்த நான் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் நூற்றாண்டு வருவதை அறிந்து அவர் வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சியில் குடந்தைக்குச் சென்று சிலநாள் தங்கிக் களப்பணி செய்தேன். பொறியாளர் இராச. கோமகன் அவர்களும் குடந்தைப் பேராசிரியர் சிவக்குமார் அவர்களும் குடந்தைக் களப்பணியில் உடனிருந்து உதவினர். நாகையில் சென்று தங்கிக் களப்பணி செய்தேன்.

வடலூர் தவத்திரு. ஊரன் அடிகளார் புலவர் சுந்தரேசனாருடன் நெருங்கிப் பழகியவர்கள். அவர்களை அருட்செல்வரிடத்து ஆற்றுப்படுத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களும் பல செய்திகளை எனக்குத் தந்து உதவினார்கள். என் நண்பர் திரு. சிவ. முத்துக்குமாரசாமி அவர்கள் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களிடத்து மிகுந்த மதிப்புடையவர்கள். . சுந்தரேசனார் அவர்களின் தமிழிசை வாழ்க்கையை ஆவணப்படுத்தும் முயற்சியில் பலநிலைகளில் துணைநின்றார்

என் தமிழ் வாழ்க்கையில் இரண்டறக்கலந்த நண்பர் திரு. தமிழ்நாடன் அவர்கள் (குவைத்) குடந்தை ப. சுந்தரேசனாரின் வாழ்க்கையை ஆவணப்படுத்திக் காட்டும் முயற்சிக்கு உரமிட்டு, ஆக்கமும் ஊக்கமும் தந்து வருகின்றார்கள். அவர்களின் நெறிப்படுத்தலில் பல தமிழ்ப்பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

முதலில் எனக்குக் கிடைத்த ப சுந்தரேசனார் நூல்களையும் பேச்சுகளையும், படங்களையும், குறிப்புகளையும் மின்வடிவில் ஆவணப்படுத்திப் பாதுகாக்கத் தொடங்கினேன். கிடைத்த ஒலிநாடாக்களையெல்லாம் எம் பி 3 கோப்புகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டேன். அதன் பிறகு தக்காரிடம் இப்பாடல்களைக் காட்டி இதன் தரத்தைக் கூட்டவும், மறு ஒலிப்பதிவு செய்யவுமான என் முயற்சிகளுக்கு உதவும்படி பலரை வேண்டினேன். ஆனால் போதிய ஒத்துழைப்பு எதிர்பார்த்தபடி அமையவில்லை

ஆனால் அமெரிக்காவில் வாழும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பெருமைக்குரிய தோழர்கள் என் வேண்டுகோளை ஏற்றுக் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு அமெரிக்காவில் நூற்றாண்டுவிழா கொண்டாட முன்வந்தமை எதிர்காலத் தமிழிசை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க ஒன்றாகும். அவர்கள் இவ்வாறு தந்த ஊக்கம் துவண்டிருந்த என் நெஞ்சுக்குத் துணிவைத் தந்தது. அதேபொழுது சென்னையில் வாழும் மூத்த வழக்கறிஞர் இரா. காந்தி ஐயாவிடம் நாமும் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என்று குறிப்பிட்டவுடன் புதுச்சேரியில் நடத்துவதற்கு இசைவு தந்தார்கள். தம்மாலான உதவிகளை ஐயா இரா. மதிவாணன் அவர்கள் வழியாகச் செய்ய முன்வந்தார்கள். 

புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து அவர்களின் தலைமையில் நூற்றாண்டு விழாக்குழு அமைத்தோம். முனைவர் அரிமளம் பத்மநாபன் அவர்களின் வழிகாட்டலில் மாநாட்டில் உரையாற்றும் அறிஞர்களின் பட்டியல் அணியமானது. நூற்றாண்டு விழாப்பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடந்து வருகின்றன. இதனிடையை  ப. சுந்தரேசனாரின் தமிழ் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் எங்கள் முயற்சியைத் திரைத்துறை சார்ந்த நண்பர்களிடமும், தொழில்நுட்பக் கலைஞர்களிடமும் பகிர்ந்துகொண்டபொழுது பலரும் உதவ முன்வந்துள்ளனர். இயக்குநர் குணவதிமைந்தன் உள்ளிட்டவர்களின் நெறிகாட்டலைப் பெற்று குடந்தை ப. சுந்தரேசனாரின் ஆவணப்பட முயற்சி தொடங்க உள்ளது. முதற்கட்ட படப்பதிவு விரைவில்….


கருத்துகள் இல்லை: