நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 30 மார்ச், 2014

கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம் தொடக்க விழா

 சிறப்பிக்கப்பட்ட மூத்த தமிழறிஞர்கள்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழன்பர்கள் ஒன்றிணைந்து கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி, அதன் தொடக்க விழாவைக் குருகாவலப்பர் கோயில் மீரா மகாலில் 29.03. 2014 காரி(சனி)க்கிழமை மாலை 5 மணிக்கு நடத்தினர்.

கங்கைகொண்ட சோழபுரம் திரு. இரா. சுகுமார், திரு. சு. அருண்குமார், திரு. மு. சனார்த்தனன்,  திரு. ப. மணிகண்டன் குழுவினரின் நாகசுர இன்னிசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பொறியாளர் குந்தவை கோமகன், மருத்துவர் பூங்கோதை பொற்கோ உள்ளிட்டோர் குற்று விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், முனைவர் பொற்கோ அவர்கள் தலைமையில் தமிழ்ச்சங்கத்தின் தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் பழமலை கிருட்டினமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். முனைவர் மு.இளங்கோவன் தமிழ்ச்சங்கத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.

மூத்த தமிழறிஞர்கள் புலவர் ஆலவாய் அ. சொக்கலிங்கம், முனைவர் அ. ஆறுமுகம், புலவர் கு. கணேசமூர்த்தி, புலவர் இ. கோ. குஞ்சிதபாதன் பிள்ளை, புலவர் மு. செல்வராசு, புலவர் சுவை. மருதவாணன், புலவர் மா. திருநாவுக்கரசு, திரு. பூவை செயராமன், கூத்தங்குடி அரங்கராசனார், கண்ணியம் ஆசிரியர் ஆ.கோ. குலோத்துங்கன், திரு. சு. இராசகோபால், திரு. பன்னீர்ச்செல்வன் ஆகியோரின் தமிழ்ப்பணியைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கியும் பொன்னாடை அணிவித்தும், நூல்கள் பரிசளித்தும் சிறப்பிக்கப்பட்டனர். மேலும் மேல்நிலைக் கல்வியில் தமிழ்ப்பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவியர்கள் சான்றிதழ் வழங்கி, ஆடை போர்த்திச் சிறப்பிக்கப்பட்டனர்.

கங்கைகொண்டசோழபுரம் பகுதியில் தொடர்ந்து தமிழிசைப் பணியாற்றிவரும் திரு. இரா. சுகுமார், திரு. சு. அருண்குமார், திரு. மு. சனார்த்தனன்,  திரு. ப. மணிகண்டன் குழுவினருக்குப் பணப்பரிசிலும், பட்டாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பட்டனர். குவைத்துப் பொங்கு தமிழ் மன்ற நிறுவுநர் தமிழ்நாடன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறிஞர்களைச் சிறப்பித்தார்.

   நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் பணியாற்றும் திரு. பூ. சரவணன் அவர்கள், திரு. பொதிகைத் தென்னவன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். செல்வி கல்பனாதேவியின் தமிழிசை நிகழ்ச்சியும், திருவுடையான் அவர்களின் தமிழிசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றன. திரு. கா. செந்தில் நன்றியுரையாற்றினார்.

கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கத் தொடக்க விழாவில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:

1. தமிழ் வளர்ச்சித்துறை, உலகத் தமிழ்ச்சங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட தமிழ் வளர்ச்சி நிறுவனங்களின் வழியாகப் பல்வேறு தமிழ் வளர்ச்சிப்பணிகளைச் செய்துவரும் தமிழக அரசைக் கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம் பாராட்டுகின்றது.

2.  மாமன்னன் இராசேந்திர சோழன் முடிசூடிய ஆயிரமாவது ஆண்டு இப்பொழுது நடைபெறுகின்றது. இந்த ஆண்டில் மாமன்னன் இராசேந்திரனின் ஆடித்திருவாதிரை பிறந்தநாளைத் தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாடும்படி கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

3. செயங்கொண்டம் குறுக்குச்சாலையில் மாமன்னன் இராசேந்திரனுக்குச் சிலை நிறுவியும் தோரணவாயில் நிறுவியும் மக்களுக்கு இவ்வூர்ப் பெருமையை நினைவூட்டும்படிக் கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கின்றது.

4. கங்கைகொண்ட சோழபுரத்தில் சிறப்புற்று விளங்கிய செயங்கொண்டார், சேக்கிழார், ஒட்டக்கூத்தர், கம்பர் போன்ற புலவர்களின் பெயரில் விருதுகளை வழங்கித் தமிழறிஞர்களைப் பாராட்டும்படித் தமிழக அரசைக் கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

5. மிகவும் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்கள் நிறைந்து வாழும் இந்தப் பகுதியில் மாமன்னன் இராசேந்திர சோழன் பெயரில் ஒரு அரசு கலைக்கல்லூரியும், பெண்கள் படிப்பதற்குரிய வகையில் ஒரு பல்தொழில் நுட்பக் கல்லூரியும் ( polytechnic college ) தொடங்கி நடத்தும்படித் தமிழக அரசைக் கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

6.   பொன்னேரி என்று அழைக்கப்படும் சோழகங்கம் ஏரியை நவீனத் தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி ஆழமாக்கியும் கரைகளை உயர்த்தியும் நீர்த்தேக்கம் ஒன்றை ஏற்படுத்திக் கங்கைகொண்ட சோழபுரம் சார்ந்த மக்களின் வேளாண்மைத் தேவையை நிறைவு செய்யும்படி கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கின்றது.


தமிழிசையால் வரவேற்பு


புலவர் ஆலவாய் சொக்கலிங்கம் சிறப்பிக்கப்படுதல்

முதுபெரும் பேராசிரியர் அ.ஆறுமுகம் அவர்கள் சிறப்பிக்கப்படுதல்

புலவர் கு. கணேசமூர்த்தி ஐயா சிறப்பிக்கப்படுதல்

புலவர் குஞ்சிதபாதன் அவர்கள் சிறப்பிக்கப்படுதல்

புலவர் சுவை.மருதவாணன் அவர்கள் சிறப்பிக்கப்படுதல்

திருக்குறள் புலவர் மு. செல்வராசனார் சிறப்பிக்கப்படுதல்

 சு.இராசகோபால் ஐயா சிறப்பிக்கப்படுதல்

பூவை. செயராமனார் சிறப்பிக்கப்படுதல்

புலவர் கூத்தங்குடி அரங்கராசனார் சிறப்பிக்கப்படுதல்

கண்ணியம் ஆ.கோ.குலோத்துங்கன் சிறப்பிக்கப்படுதல்

புலவர் மா. திருநாவுக்கரசு சிறப்பிக்கப்படுதல்
 பேராசிரியர் த. பழமலை உள்ளிட்டோர்

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

கங்கை கொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம் தொடக்க விழா தொடர்பான பதிவுகளைக் கண்டேன். விழா நிகழ்வுகளைப் பதிவு செய்தவிதம் சிறப்பாக உள்ளது. தமிழ்ச்சங்கம் தொடர்ந்து சீரிய பணியாற்றி பல்லாற்றானும் சிறப்புற மிளிர எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் அகமகிழ்கின்றேன்.