நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 10 ஜூன், 2012

சிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன் படத்திறப்பு நிகழ்ச்சி


இரா.முத்துக்குமாரசாமி,இரா,இளவரசு,பெருங்கவிக்கோ-படத்திறப்பாளர்கள்

சிங்கப்பூரில் வாழ்ந்த பாவாணர் பற்றாளர் வெ.கரு. கோவலங்கண்ணன் அவர்கள் அண்மையில் சிங்கப்பூரில் இயற்கை எய்தினார். அன்னாரின் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலகத்தின் அரங்கில் 08.06.2012 மாலை 7மணிக்கு நடைபெற்றது.

திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இரா.முத்துக்குமாரசாமி ஐயா அவர்கள் தலைமை தாங்கி ஐயா கோவலங்கண்ணன் அவர்களின் படத்தினைத் திறந்துவைத்து இரங்கலுரையாற்றினார். பேராசிரியர் இரா.இளவரசு அவர்கள் கோவலங்கண்ணன் அவர்களின் தமிழ்ப்பற்றினை எடுத்துரைத்து உரையாற்றினார். முனைவர் இராமர் இளங்கோ அவர்கள் கோவலங்கண்ணன் அவர்கள் நிறுவிய பல்வேறு அறக்கட்டளைகளையும் தமிழ்ப்பணிகளையும் நினைவுகூர்ந்து உரையாற்றினார்.

பாவாணர் அவர்களின் திருமகனார் திரு.தே.மணி அவர்கள் பாவாணர்மேல் கோவலங்கண்ணன் அவர்களுக்கு இருந்த தமிழ்ப்பற்றையும் பாவாணர் நூல்கள் பரவவும், வறுமை நீங்கவும் செய்த செயல்களையும் நினைவுகூர்ந்தார்.

கோவலங்கண்ணன் அவர்களின் அலுவலகத்தில் பணிபுரிந்து தேவநேயம்.ஆர்க் என்ற இணையதளத்தை வடிவமைத்துப் பாவாணர் நூல்கள், பாவாணர் மடல்களை இணையவெளியில் உலாவரச்செய்த கவி அவர்களின் உரை கோவலங்கண்ணன் அவர்களின் தமிழ்ப்பற்றை எடுத்துரைத்தது.

உலகத்தமிழ்க்கழகப் பொதுச்செயலாளர் முனைவர் அரணமுறுவல் பாவாணர் கொள்கைகள் நடைமுறைப்படுத்தவேண்டியதன் தேவையை வலியுறுத்திப் பேசினார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் திருமகனார் திரு. மா.பூங்குன்றன் அவர்கள் கோவலங்கண்ணன் அவர்களின் தனித்தமிழ் ஈடுபாட்டையும் தமிழறிஞர்களைப் புரந்தருளிய பாங்கையும் விவரித்தார்.

நான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிங்கப்பூர் கோவலங்கண்ணன் அவர்களுடன் பழகிய பழக்கத்தையும் எனக்கும் அவருக்கும் இருந்த நட்பு நெருக்கத்தையும் நினைவுகூர்ந்து பேசினேன். முறம்பு பாவாணர் கோட்டத்திற்கு உதவியது, வீ.ப.கா.சுந்தரம் அவர்களுடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு, அதன்வழிப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிறுவிய அறக்கட்டளை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்ட பாவாணர் அறக்கட்டளை, கோவலங்கண்ணன் அவர்கள் வெளியிட்ட தமிழ்நூல்கள், முனைவர் மு.தமிழ்க்குடிமகனுக்கும் கோவலங்கண்ணன் அவர்களுக்கும் இருந்த தொடர்பு பற்றி எடுத்துரைத்தேன்.

நிகழ்ச்சியை திரு.வீரபாகுசுப்பிரமணியன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்.

முனைவர் அருகோ. பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், அன்புவாணன் வெற்றிச்செல்வி, வெல்லும் தூயதமிழ் ஆசிரியர் க.தமிழமல்லன், பதிப்பாளர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர். பாவாணர் பற்றாளர்கள், தென்மொழி அன்பர்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அலுவலர்கள், கோவலங்கண்ணன் ஐயாவின் மகன் பொற்கைப்பாண்டியன் மற்றும் குடும்பத்தினர் நிறைந்த எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.


தே.மணி,இராமர் இளங்கோ,இரா.முத்துக்குமாரசாமி,இரா.இளவரசு.அரணமுறுவல்


வீரபாகு,இரா.இளவரசு,இராமர் இளங்கோ


மு.இளங்கோவன் மலர்வணக்கம் செய்தல்


பார்வையாளர்கள்

கருத்துகள் இல்லை: