நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 30 டிசம்பர், 2011

புதுவையில் கடும் புயல் - இருளில் மூழ்கிய புதுவை

புதுச்சேரியைப் புயல் தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டதாலும், இது கடற்கரையில் அமைந்த ஊர் என்பதாலும் 29.12.2011 இரவு பத்துமணி முதல் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்ததப்பட்டது. காற்றும் பலமாக வீசியது. 30.12.2011 இரவு ஒரு மணிமுதல் முதல் கடும் புயற்காற்று இந்த ஊரைத் தாக்கியது. வீட்டின் சன்னல் கதவுகள் நிலைக் கதவுகளைக் காற்று வேகமாக அடித்து உடைத்தது. நள்ளிரவு இரண்டுமணி முதல் புயலின் வேகம அதிகரித்தது. விடியற்காலம் நாலரை மணிக்குப் புயலின் வேகம் மிகவும் அதிகரித்துள்ளதை உணரமுடிகின்றது. ஐந்து மணிக்கு மேலும் காற்று அதிகமாக வீசுகின்றது. வானிலை மையம் முன்னதாகப் புயலின் தாக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டதாலும் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும் புயல்பற்றிய செய்தி மக்களுக்குத் தெரிந்ததால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.கடற்கரை ஒட்டிய பகுதியில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தஞ்சம் அடைந்துள்ளனர். பெரும்பாலான மரங்கள் சாய்ந்திருக்க வாய்ப்பு உண்டு.அதுபோல் குடிசைவீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டிருக்கலாம். காலையில்தான் இழப்புகள் குறித்த விவரம் தெரியவரும். இரவுப்பொழுது என்பதால் அச்சம் கலந்த உறக்கத்தில் மக்கள் உள்ளனர் தொடர்ந்து புயல்காற்று வீசுகின்றது. மழையும் விடாமல் பெய்து கொண்டுள்ளது.தொலைத்தொடர்பு சில இடங்களில் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

1 கருத்து:

soundiramouty சொன்னது…

thanks