நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

மகிழ்ச்சியில் இயக்குநர் வ.கௌதமன்…


மகிழ்ச்சித் திரைப்படத்தில் ஒரு காட்சி

நேற்று இரவு ஓர் எழுத்துப் பணியில் ஆர்வமுடன் மூழ்கிக் கிடந்தேன். அப்பொழுது செல்பேசியில் ஒரு தவறுதல் அழைப்பு வந்து நெடுநாழிகை ஆகியும் பார்க்காமல் இருப்பதைக் கண்டேன். சிலபொழுதுகளில் முதன்மையான பணிகளில் ஈடுபட்டிருந்தால் அழைப்புகளை ஏற்கமுடியாமல் இப்படி நேர்வது உண்டு.அழைத்தவர்களின் இயல்புக்குத் தக அவர்களுக்கு நானே பேசிப், பேச விழைந்ததன் நோக்கம் என்ன என வினவுவது உண்டு.அப்படி இந்தமுறை அழைத்தவர் யாரெனக் கவனித்தால் திரைப்பட இயக்குநர் வ.கௌதமனின் அழைப்பாக இருந்தது.அவரின் மகிழ்ச்சி திரைப்படப் பாடல் வெளியீடு அண்மையில் நடந்ததை அன்பர்கள் வழியாக அறிந்திருந்தேன்.தம் திரைப்படம் சார்ந்த முயற்சிகளை அவ்வப்பொழுது எம் போலும் இளையர்களிடம் பேசி இயக்குநர் மகிழ்வது உண்டு.எனக்கும் ஓய்வாக இருக்கும்பொழுது அப்படி அழைப்பு வரும். திரைப்போக்குகள்,உலகப்போக்குகள் பற்றி உரையாடுவோம்.

நான் இயக்குநர் கௌதமன் அவர்களைச் செல்பேசியில் அழைத்தேன்.தாம் திருவாரூர் செல்வதாகவும் இடையில் புதுச்சேரியில் என்னைக் காண விரும்புவதாகவும் இயக்குநர் சொன்னார். அவர் உலவிக்கொண்டிருந்த புதுச்சேரிக் கடற்கரைப் பகுதிக்கு அடுத்த பத்து நிமையத்தில் சென்றேன். இயக்குநர் அவர்களுடன் ஐந்தாறு நண்பர்களும் உலவியபடி இருந்தனர்.


இயக்குநர் வ.கௌதமன்

அந்தப் புதுவைக் கடற்கரையில் மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியில் நம் பெருமைக்குரிய இயக்குநர் யாரென அடையாளம் தெரியாததால் நாங்கள் விடுதலையாக நடந்து சென்றோம். அங்குள்ள சட்டப்பேரவை அலுவலகத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினரைச் சந்தித்துவிட்டு அண்ணன் கௌதமன் அவர்கள் திருவாரூர் செல்வது திட்டம்.சட்டமன்ற உறுப்பினரைப் பார்க்கும் முயற்சிக்கு இடையே மகிழ்ச்சி திரைப்படம் பற்றியும் அதன் கதை, ஒளிப்பதிவு, பாடல், இசை பற்றியும் சிறிது உரையாடினோம்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மிகச்சிறப்பாக இருபாடல்களைத் தந்துள்ளதையும் அண்ணன் அறிவுமதி ஒருபாடல் எழுதியுள்ளதையும் நண்பர் பேராசிரியர் பச்சியப்பன் அவர்கள் இரு பாடல் எழுதியுள்ளதையும் இசையமைப்பாளர் வித்தியாசாகர் மிகச்சிறப்பாக இசையமைத்துள்ள பாங்கையும் இயக்குநர் மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டார்.

மகிழ்ச்சி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் விளக்கணி விழாவு(தீபாவளி)க்கு வெளிவர உள்ளது.அதற்குள் மருத்துவர் ச.இராமதாசு ஐயா அவர்களும் உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் முன்காட்சியாகப் படத்தைப் பார்த்து வெகுவாகப் பாராட்டியதையும் இருவர் உள்ளத்தையும் படம் உருக்கியதையும் ஆர்வம்பொங்க மகிழ்ச்சியுடன் இயக்குநர் கௌதமன் வெளிப்படுத்தினார்.

மிகப்பெரிய சோகத்தில் சிக்கிக் கிடக்கும் உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியோடு இந்தப் படம் வெளிவர உள்ளது.இதில் இயக்குநர் கௌதமனே கதைத்தலைவனாக நடித்துள்ளார்.இயக்குநர் சீமான் அவர்களும் சிறப்பாக நடித்துள்ளார். கலைநயம் பொருந்திப் பாசமழை பொழியும் இந்தப் படம் எழுத்தாளர் நீல பத்மநாபன் அவர்கள் எழுதிய தலைமுறைகள் புதினம் மகிழ்ச்சிப் படமாக மாறியுள்ளது கூடுதல் செய்தி.எனக்கும் பாடல்கள் அடங்கிய ஒரு குறுவட்டை இயக்குநர் வழங்கினார்.

ஊத்துத் தண்ணி ஆத்தோட
ஆத்து ஓடம் காத்தோட..

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாடல் மீண்டும் ஒரு சிற்றூர்ப்புற வாழ்வைப் பொதிந்துவைத்துள்ளது.

”ஆரால்மீனு சேத்தோட”

என்று சூழலுக்குத் தக என் சிற்றூரின் சேறு குழப்பி எழுத இனி ஒரு கவிஞர் பிறந்து வருவாரா என்று ஏங்குகிறேன் கவிப்பேரரசே!.


இயக்குநருடன் மு.இளங்கோவன்


மகிழ்ச்சிப் படத்தில் ஒரு காட்சி

கருத்துகள் இல்லை: