நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 9 செப்டம்பர், 2010

ஒரு சமூகத்தின் ஆவணம் க்ஷத்ரியன் இதழ் – தொகுப்பு


க்ஷத்ரியன் இதழ்த்தொகுப்பு முகப்பு

அவ்வப்பொழுது புதுச்சேரியில் என் இல்லத்துக்கு நண்பர்கள் வந்து மகிழ்ச்சியூட்டுவது உண்டு.புதுச்சேரி நண்பர்களும் வருவார்கள்.தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ,பிற நாடுகளிலிருந்தும் வருவது உண்டு.அவ்வாறு வரும் நண்பர்கள் பழைமை போற்றுபவர்களாக இருப்பார்கள்.சிலர் இணையம் வழி அறிமுகம் ஆகியும் நேரில் இப்பொழுதுதான் பார்க்கிறோம் என்ற நிலையில் இருப்பார்கள்.அவ்வகையில் பல ஆண்டுகளுக்கு முன் பழகிய நண்பர்கள் சிலர் வருவதாகவும் என்னைவீட்டில் இருக்கும்படியும் அன்புடன் கேட்டுக்கொண்டார்கள். நானும் அவர்களின் வருகைக்காகக் காத்து இருந்தேன்.

நான் குறிப்பிட்ட முகவரியை விட்டு, அவர்கள் புதுச்சேரியின் பல பகுதிகளையும் அலைந்து திரிந்து எங்கள் வீடு இருக்கும் பகுதிக்கு அருகில் இருந்து மீண்டும் அழைத்தார்கள்.அதியமான் போர்க்களக் கருவிபோல் புதுச்சேரி சிதைந்து கிடக்கிறது.புதுச்சேரியில் சாலைகளில் பள்ளம் பறிப்பதும், அதை மூடுவதும்,தோண்டுவதும்,வெட்டுவதும் அதைத் தூர்ப்பதுமாக கிடந்த காட்சி கண்டு வந்த நண்பர்கள் சோர்ந்து காணப்பட்டனர்.அவர்களின் மகிழ்வுந்து எங்கள் வீட்டில் நண்பர்களை இறக்கிவிட்டுக் களைத்து நின்றது.

வந்த நண்பர்களுள் ஒருவர் திரு.சாமிக் கச்சிராயர்.கடலூர் திரைப்பட இயக்கம் என்ற அமைப்பு நடத்திப் பல்வேறு கலைஞர்களை ஊக்கப்படுத்தி வருபவர். கடலூர் அடுத்த ஒரு ஊரை அரசு கையகப்படுத்த முயன்றபொழுது ஊர் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தி மக்களையும் ஊரையும் காத்தவர்.


சாமிக்கச்சிராயர்

இன்னொரு நண்பர் குறும்பட இயக்குநர் தமிழாகரன்.இவர் இயக்கிய உறவு என்ற குறும்படம் மாந்த உறவுகளை நேசிக்கச்செய்யும் அரிய படம்.மிகச்சிறந்த பின்னணியில் இசையும் காட்சியும் போட்டியிட்டுக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெற்ற படம்.பலமுனைகளில் இந்தப் படத்தில் தமிழாகரன் பங்களிப்பு செய்துள்ளார்.இயக்குநர் பாலா போல பின்னாளில் பேசப்படுவார்.


இயக்குநர் தமிழாகரன்

இன்னொரு நண்பர் திரு.அண்ணல் அவர்கள்.புகழ்பெற்ற ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் செய்திப்பிரிவில் ஏழாண்டுகள் பணிபுரிந்த பட்டறிவு உடையவர்.இவர் மாமனார் எங்கள் பகுதியான புங்கனேரிக்கார்.அவர்களும் வந்திருந்தார்கள்.எங்கள் பிள்ளைகளை அமைதியாக இருக்கும்படி அனைவரும் வேண்டிக்கொண்டோம்.அப்பொழுதும் அவர்கள் அடிக்கடி கரிக்கோல் கேட்பதும் அழிப்பான் கேட்பதும் என்று அழுது புரண்டு அடம்பிடித்தனர்.அதன் இடையே நண்பர் அண்ணலும்,கச்சிராயரும் வந்த நோக்கத்தைக் குறிப்பிட்டார்கள்.


ஆறு.அண்ணல்

அண்ணல் கையில் ஒரு புத்தகத் தொகுப்பைக் கையுடன் கொண்டு வந்து அடுக்கியிருந்தார்.இது என்ன நூல்கள் என்றேன்.

க்ஷத்ரியன் இதழ் தொகுப்பு என்றனர்.இதுவரை கேள்விப்படாத பெயராக உள்ளதே என்றேன்.பெரும்பாலும் ஊடகத்துறையில் இருப்பவர்கள்,புகழ்பெற்ற மேடைப்பேச்சாளர்கள் சிலர் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போலும் குறிப்பிட்ட இதழ்கள் சிலவற்றின் பெயரை மட்டும் ஒப்புவிப்பார்கள்.மற்ற இதழ்களின் பெயர்களை ஒலிக்கக்கூட மனம் விரும்ப மாட்டார்கள்.

பொன்னி என்ற திராவிட இயக்க ஏடு பற்றி ஒரு சொல் சொல்ல மாட்டார்கள்.பாவேந்தரின் குயில் பற்றி மூச்சுவிடமாட்டார்கள்.அந்த வகையில் தமிழகத்துக்கு அறிமுகம் ஆகாமல் போன க்ஷத்ரியன் இதழ் பற்றிய சிறு அறிமுகத்தை நண்பர் அண்ணல் அவர்கள் சொன்னார்கள்.எனக்கு மிகப்பெரிய வியப்பு.

நான் திராவிட இயக்க ஏடான பொன்னி என்னும் ஏட்டைப் பல ஆண்டுகள் தேடிப் பின்னர் பெற்றேன்.அதனை முழுமையாகப் பல தொகுப்புகளாக வெளியிட நினைத்தேன்.பொன்னி ஆசிரிய உரைகள் வந்தது.பொன்னி பாரதிதாசன் பரம்பரை வந்தது.

பொன்னியில் வெளிவந்த சிறுகதைகள் தொகுக்கப்பெற்று வெளியிடும் நிலையில் உள்ளது.அதில் பொன்னி வெளியான காலத்தில் அறிமுக எழுத்தாளராக இருந்து பின்னாளில் பாட்டுத்துறையில் புகழ்பெற்ற ஒருவரின் சிறுகதையும்,பிறகு அகில உலகும் போற்றும் சிறுகதை எழுத்தாளர் ஒருவரின் சிறுகதையும் இருந்தது. அந்த எழுத்தாளர்களின் வாரிசுகளை நெருங்கி வெளியிடும் என் முயற்சிக்கு அனுமதி வேண்டினேன். அவர்கள் அனுமதி மறுக்கவே அந்த எழுத்தாளர்களின் சிறுகதையைத் தமிழ் உலகம் பார்க்கமுடியாமல் உள்ளது.

வேறு யாரிடம் இருந்தாலும் இருக்கட்டும். குழந்தைக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்று பதைத்த தாயின் உள்ளம் இந்த எழுத்தாள வாரிசுகளுக்கு இல்லாமல் போனதால் பெற்றோரின் படைப்பே வெளிவராமல் பார்த்துக்கொண்டார்கள். பத்தாண்டுகளாக அந்தப் பொன்னிக் கதைத்தொகுப்பு வெளிவராமல் உள்ளது.என் நண்பர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சிக்கலான அந்தக் கதைகளை மட்டும் நீக்கிவிட்டு உரிமைச்சிக்கல் இல்லாத கதைகளை வெளியிடுவோம் என்று உள்ளேன்.இந்த நிலையில்தான் நண்பர் அண்ணல் அவர்களின் க்ஷத்ரியன் இதழ்தொகுப்பு முயற்சி எனக்கு மகிழ்ச்சி தந்தது.

க்ஷத்ரியன் இதழ் தொகுப்பு 17 தொகுப்புகளாக வெளிவந்துள்ளது.இது 1923-1951 காலகட்டத்தில் வெளிவந்த இதழ்களின் தொகுப்பாகும்.
ஆய்வுரை எழுதியும், மேற்பார்வை செய்தும் மிகச் சிறந்தமுறையில் இதழ் தொகுப்பு வெளிவர உதவியர் கவிஞர் காவிரிநாடன் ஆவார்.

க்ஷத்ரியன் இதழின் ஆசிரியர் சேலம் கவிச்சிங்கம் இராஜரிஷி சு.அர்த்தநாரீச வர்மா ஆவார்(27.07.1874- 07.12.1964).இவர் பெற்றோர் சேலம் சுகவனபுரி-சுகவன நாயகர்-இலக்குமி அம்மையார்ஆவர். திருப்பூந்துருத்தி, இந்திரபீடம், சிவயோகி கரபாத்திர சுவாமிகளிடம் சிவதீட்சை பெற்றவர். சமற்கிருதம், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம்,மலையாளம்,கர்நாடக இசை,சோதிடம்,தமிழ் சித்த மருத்துவம் அறிந்தவர்.

அர்த்தநாரீச வர்மா அவர்கள் சைவசமயத்தொண்டுகள் புரிந்துள்ளார். மதுவிலக்குப் போராட்டங்களில் ஈடுபட்டவர். மடங்களில் ஆதீனப்புலவராகப் பணியாற்றியவர். தாம் பிறந்த குலத்துக்குக் குலப்பணியாற்றியவர். இலக்கியத்தொண்டுகள் செய்துள்ளார்.பல இதழ்களை வாழ்நாள் முழுவதும் நடத்தியும் நூல்கள் எழுதியும் இலகியத் தொண்டாற்றியுள்ளார்.

இவர் வடார்க்காடு மாவட்டம் கேளூரில் ஆர் நாராயணனா நாயகர் வீட்டில் நோய் வாய்ப்பட்டார். திருவண்ணாமலை முத்து ஆறுமுகம் என்பார் மண்டியில் 07.12.1964 இல் மறைவுற்றார்.திருவண்ணாமல் ஈசானி மடத்தருகே இவரின் கல்லறை உள்ளது.

க்ஷத்ரியன் இதழைப் பாதுகாத்து வழங்கியவர் திரு.பொன்.இராமச்சந்திரன் ஆவார்.இவர் காஞ்சிபுரம் மாவட்டம் வந்தவாசி வட்டம் குண்ணகம்பூண்டியில் வாழ்ந்த பொன்னுச்சாமிக் கண்டர் –உண்ணாமலை அம்மாள் ஆகியோரின் மகனாவார்.

க்ஷத்ரியன் இதழின் 17 தொகுளிலும் உள்ள செய்திகள் விவரம் வருமாறு:

க்ஷத்ரியன் இதழில் இட்பெற்ற செய்திகள் பொருள் அடிப்படையில் தொகுக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதியாகத் தரப்பட்டுள்ளன.முதல் தொகுதியில் கவிஞர் காவிரிநாடனின் ஆய்வுரையும் பதிப்பாசிரியர் அண்ணல் அவர்களின் முன்னுரையும் உள்ளன.இதுவரை கிடைத்துள்ள இதழ்கள் பற்றிய புள்ளி விவரம் யாவும் முதல்தொகுதியில் உள்ளன.முதல் இதழ் அமைப்பு, முக்கிய படங்கள் மின்வருடி இணைக்கப்பெற்றுள்ளன.

தொகுதி 1

அர்த்தநாரீச வர்மா காந்தியின் பக்தர். தேசியவாதி.தன் சமூக வளர்ச்சிக்குரிய கட்டுரைகளை எழுதியுள்ளார்.அக்காலத்தில் வெளிவந்த நூல்கள்,இதழ்கள் பற்றிய குறிப்புகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.மதிப்புரைகள் உள்ளன.பாடல்கள் பல உள்ளன.விளம்பரங்கள் உள்ளன.

தொகுதி 2

அமுதமொழிகள்,கீதை உபதேசம் பற்றிய செய்திகள் உள்ளன.புறநானூற்றுப் புலவர்களின் பாடல்களை உரை ஓவியமாக்கித் தந்துள்ளார்.மனிதனின் நோயற்ற வாழ்வுக்கு உரிய ஒழுக்க வழிகளைக் குறிப்பிட்டுள்ளார்.வாழ்வியல் சிந்தனைகளை இடம்பெறச்செய்துள்ளார்.

தொகுதி 3

வர்மாவின் பாடல்கள் இந்தத்தொகுதியில் உள்ளன.

தொகுதி 4

44 பொருள்களில் செய்திகள் இந்தத் தொகுதியில் உள்ளன.

தொகுதி 5

சோழர் வரலாறு,பல்லவர் வரலாறு,பாண்டியர் வரலாறு,மழவர் வரலாறு,பேராலயங்களின் வரலாறு உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்களுக்கு உதவும் தொகுதி.

தொகுதி 6 வன்னியர்களைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.96 தலைப்புகளில் சமுதாயச்செய்திகள் இடம்பெற்றுள்ளன.

தொகுதி 7
138 தலைப்புகளில் வன்னியர் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.மூலதனம் நூலை மொழிபெயர்த்த தியாகி ஜமதக்கினி பற்றிய செய்தியும் இடம்பெற்றுள்ளது.

தொகுதி 8

சாதிகள் பற்றிய செய்திகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

தொகுதி 9

இந்தப் பகுதி படிப்பவர்களுக்கு அதிர்ச்சி தரும் சாதி மோதல்கள் பற்றிய பல தகவல்களைக் கொண்டுள்ளது.

தொகுதி 10.
கதர் பற்றிய பல தகவல்களைத் தாங்கியுள்ளது.

தொகுதி 11
400 மேற்பட்ட அரசியல் செய்திகள் உள்ளன.

தொகுதி12.
பழமொழிகள்,சிறுகதைகள், மருத்துவக்குறிப்புகள்,கூட்டுறவு,ராய்,சித்தரஞ்சன்தாசு,சேலம் வரதராச நாயுடு பற்றிய கட்டுரைகள் உள்ளன.

தொகுதி 13.
சுதேசமித்திரன்,ஸ்வராஜ்யம்,இந்தியா,தமிழ்நாடு,நவ இந்தியாவில் வெளிவந்த கட்டுரைகளின் மறுபதிப்புகள் உள்ளன.

தொகுதி 14.
இந்திய அரசியல்,காங்கிரசு கட்சி பற்றிய செய்திகள் உள்ளன.

தொகுதி 15

1931 ஆம் ஆண்டு சூலை முதல் செப்டம்பர் முடிய உள்ள காலத்தில் நடந்த அரசியல்,காங்கிரசு,வெள்ளைக்கார அரச நடவடிக்கைகளைக் கூறுகின்றது.

தொகுதி 16

அரசியல் சார்புடைய பெட்டிச்செய்திகள்,பத்தி நீண்ட செய்திகள்,பக்க கட்டுரைகளும் உள்ளன.

தொகுதி 17
பின்னாளில் வர்மா வெளியிட்ட க்ஷத்ரியன்,தமிழ்மன்னன்,க்ஷத்ரிய சிகாமணி உள்ளிட்ட இதழ்களின் தொகுப்பாக இந்தத்தொகுதி உள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நடுப்பகுதி வரையிலான காலகட்டத்தை ஆராயும் சமூக ஆய்வாளர்களுக்கும் இதழியல்துறை ஆய்வாளர்களுக்குத் இந்தத் தொகுதிகள் பெரிதும் பயன்படத்தக்கன.இதுபற்றி பின்னரும் விரிவாக எழுதுவேன்

இதழ்த்தொகுப்பு வேண்டுவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

ஆறு.அண்ணல்
4/38 கலைமகள் நகர் 2 ஆம் முதன்மைச்சாலை,
ஈக்காட்டுத்தாங்கல்,சென்னை-600 032
பேசி : + 91 44 22250807

இதழ்த்தொகுப்பு விலை உருவா 3000-00

3 கருத்துகள்:

Giri சொன்னது…

ரொம்ப முக்கியமான ஆவணம். பகிர்ந்தமைக்கு நன்றிகள். நான் புத்துச்சேரிக்கு வந்து பல வருடங்களாகின்றன. உங்கள் பதிவுகள் மூலம் பல இடங்களின் சமீபத்திய மாற்றங்களை அறிய முடிகிறது. நன்றி.

ரா.கிரிதரன்

http://beyondwords.typepad.com

Giri சொன்னது…

ரொம்ப முக்கியமான ஆவணம். பகிர்ந்தமைக்கு நன்றிகள். நான் புத்துச்சேரிக்கு வந்து பல வருடங்களாகின்றன. உங்கள் பதிவுகள் மூலம் பல இடங்களின் சமீபத்திய மாற்றங்களை அறிய முடிகிறது. நன்றி.

ரா.கிரிதரன்

http://beyondwords.typepad.com

Unknown சொன்னது…

paarattukkal.saamikachirayar