நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 27 பிப்ரவரி, 2010

தமிழ்க்கணினி பன்னாட்டுக் கருத்தரங்கம் இனிதே நிறைவு


பதிவாளர் பெ.சரவணன்,ஆண்டோபீட்டர்,ப.அர.நக்கீரன்,ந.தெய்வசுந்தரம்

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித்துறையின் மொழியியல் ஆய்வுப்பிரிவு ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டுக் கருத்தரங்கின் மூன்றாம் நாள் நிகழ்வு(26.02.2010) காலை பத்து மணிக்குத் தொடங்கியது. கணினிவழித் தமிழ்க் கல்வியும் பிற கணினிப் பயன்பாடுகளும் என்ற பொதுத்தலைப்பில் நிகழ்ந்த அரங்கில் பேராசிரியர் நடராசப் பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினார்.முனைவர் விசயராணி அவர்கள் தமிழ் மின் இதழ்கள் என்ற தலைப்பில் இணையத்தில் உள்ள மின்னிதழ்களை அறிமுகப்படுத்தினார்.நான் தமிழ் விக்கிப்பீடியா பற்றியும் அதன் ஒரு பயன்பாட்டுக் கூறான தமிழ் விக்சனரி பற்றியும் அரங்கிற்கு அறிமுகம் செய்தேன்.தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை இணைப்பது,தமிழ் விக்சனரியில் சொற்களை இணைப்பது பற்றிக் காட்சி விளக்கத்துடன் சொன்னதுடன் தமிழ் விக்கி வளர்ச்சி பற்றி எடுத்துரைத்தேன்.(என் கட்டுரையைப் பின்பு இணைப்பேன்). தமிழ் விக்கிக்குப் பணியாற்ற அனைவரையும் அழைத்தேன்.

அடுத்து முனைவர் ஆ.இரா.சிவகுமாரன்(சிங்கப்பூர)அவர்கள் தமிழ்க்கணினி சிங்கப்பூர் கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் முறை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.அடுத்து முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கும் திரு.அண்ணா கண்ணன் அவர்கள் தமிழக அரசின் இணையத்தளங்கள் மொத்தம் 431 எனவும் இதில் தமிழின் பயன்பாடு எந்த நிலையில் உள்ளது எனவும் எடுத்துக்காட்டினார்.பேராசிரியர் இராமன் அவர்கள் உயர்கல்வியில் ஒருங்கு குறி குறியீட்டுமுறை செயலாக்கத்தின் அவசியம் என்ற தலைப்பில் ஒருங்குகுறியின் தேவையை எடுத்துரைத்தார்.பின்னர் முனைவர் மு.பழனியப்பன் அவர்கள் தமிழ் இணைய நூலகங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்திப் பேசினார். பேராசிரியர் தியாகராசன்(சிங்கப்பூர்) சிங்கப்பூரில் கல்வி வளர்ச்சிக்குக் கணினியின் தேவை குறித்து உரையாற்றினார்.இந்த நிகழ்வு பகல் 1.15 மணி வரை நடந்தது.

பகலுணவுக்குப் பிறகு மீண்டும் நிகழ்வு தொடங்கியது.மூன்று நாளாகப் பேசப்பட்ட செய்திகள் பற்றி கலந்துரையாடினோம்.கணினித் தொழில்நுட்ப வல்லுநர்களும் மொழியியல் வல்லுநர்களும் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.

பிற்பகல் 3.30 மணியளவில் நடந்த நிறைவு விழாவில் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அனைவரையும் வரவேற்க,சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் பெ.சரவணன் அவர்கள் தலையுரையாற்றினார். திரு.ஆண்டோ பீட்டர்,முனைவர் ப.அர.நக்கீரன்(இயக்குநர்,தமிழ் இணையப் பல்கலைக்கழகம்),ஆ.க.இராமகிருட்டினன்(பெங்களூரு)சிறப்புரையாற்றினர். முனைவர் இராம.கி,மறவன்புலவு சச்சிதானந்தன் கருத்துரை வழங்கினர்.

மாநாட்டின் தீர்மானங்களைப் பேராசிரியர் நடராசப்பிள்ளை அவர்கள் முன்மொழிந்து பேசினார்.பேராசிரியர் மு.பொன்னுசாமி அவர்கள் நன்றியுரைக்கக் கருத்தரங்கம் இனிது நிறைவுற்றது.

கருத்தரங்கத் தீர்மானங்கள் சில:

1.தமிழ்க்கணினி ஆய்வுக்கு உதவும் வகையில் கணினி மொழியாய்வு மையங்களை இரண்டு இடங்களில் அரசு அமைக்க வேண்டும்.

2.பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்,பேராசிரியர் கணேசன் ஆகியோர் உருவாக்கியுள்ள தமிழ்ச்சொல் திருத்திகள்,இலகணத்திருத்திகள் மென்பொருள்களை அரசு ஏற்க வேண்டும்.

3.ஒருங்குகுறி(யுனிகோடு),TACE 16 ஆகியவற்றை அரசு ஏற்று இசைவளிக்க வேண்டும்.

4.தட்டச்சிட்டால் ஒலித்துக்காட்டும் மென்பொருள் உருவாக்கியப் பேராசிரியர் க.இராமகிருட்டினன் அவர்களின் ஆய்வு முயற்சிக்கு அரசு உதவ வேண்டும்.

5.நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் யாவும் ஒருங்குகுறியில் வெளியிடப்பெற வேண்டும்.

6.தமிழகப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஆய்வுகளின் சுருக்கம் ஒருங்குகுறியில் இணையத்தில் இணைக்கப்பட வேண்டும்.

7.தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பெறும் ஆய்வுகட்டுரைகள் படிமக்கோப்புகளாக(பி.டி.எப்) இணையத்தில் இணைக்கப்படவேண்டும்.

8.தமிழ்நாடு,புதுச்சேரி,இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா,மொரிசீயசு நாடுகள் இணைந்து தமிழ்மொழிக்காக ஒருங்கிணைந்த குழுக்களை உருவாக்க வேண்டும்.கூட்டுப்பேச்சுகள் வழியாகத் தமிழ்மொழி வளர்ச்சி பற்றி உரையாடவேண்டும்.

9.மாற்றுத் திறனாளர்களுக்குத் தேவையான மென்பொருள்களை உருவாக்க வேண்டும்.

10.சென்னைப் பல்கலைக்கழகத்தில் சொல்தொகுப்பு மையத்தை உருவாக்க வேண்டும்.

11.விக்கிப்பீடியா போலப் பன்னாட்டுச் சொல்தொகுப்பு முயற்சி ஒருங்கிணைக்கப்பட வேண்டும்
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


உரை-ஒலிமென்பொருள் உருவாக்கிய முனைவர்.ஆ.க.இராமகிருட்டினன்(பெங்களூரு), நான்


தியாகராசன்,நான்,நடராசப்பிள்ளை,ஆ.இரா.சிவகுமாரன்

கருத்துகள் இல்லை: