நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 24 பிப்ரவரி, 2010

தமிழ்க்கணினி பன்னாட்டுக்கருத்தரங்கு முதல் அமர்வு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி பன்னாட்டுக் கருத்தரங்கின் முதல் அமர்வு இன்று(24.02.2010) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரை நடந்தது. எழுத்தாளர் மாலன் அவர்கள் தலைமையில் நடந்த அரங்கில் பயனுடைய வகையில் அமர்வு நடைபெற்றது.வழக்கமான கட்டுரை படிக்கும் முறையில் இல்லாமல் மொழியியல் அறிஞர்கள் கணினி மொழியியல் பற்றி உரையாடினர். முனைவர் நீலாதிரி சேகர்தாசு, பேராசிரியர் ந.கணேசன்(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்,பேராசிரியர் அருள்மொழி,பேராசிரியர் உமாராசு, பேராசிரியர் டேவிட் பிரபாகர் ஆகியோர் கருத்துரை வழங்கினர். திருவாளர்கள் இரா.ம.கி.ஐயா, பேராசிரியர் செ.வை.சண்முகம்,பத்ரி,காந்தளகம் சச்சிதானந்தம், முனைவர் இரவிசங்கர்(புதுவை) உள்ளிட்டவர்கள் உரையாடலில் கலந்துகொண்டனர்.
மாலன் அவர்கள் "இன்று மொழி சுருங்கிவிட்டது; ஆனால் மொழிப் பயன்பாடு அதிகரித்துள்ளது அதாவது மொழி ஒரே நேரத்தில் இரு வேறு திசைகளில் பயணிக்கிறது" எனக் குறிப்பிட்டார்.புணர்ச்சியில் ஒற்றுகள் இல்லாமலும் வேற்றுமை உருபுகள் இல்லாமலும் ஊடகங்களில் எழுதப்படுகின்றன என்றார்.கணினி வந்த பிறகு ஆங்கிலத்துடன் தமிழ் ஒப்புமைப்படுத்தப்படுகிறது என்றார்.வேறு தளங்களுக்குத் தமிழ்ப் பயன்பாடு செல்ல வேண்டும்.அதாவது பேச்சு-உரை எனவும்,உரை-பேச்சு எனவும், தானியங்கி மொழிபெயர்ப்பு எனவும் தமிழ்க் கணினி வளர வேண்டியுள்ளது என்றார்.மொழிக்குரிய தரவுத்தளங்கள் தேவை என்றும்,ஆர்வமுடைய அமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் கருத்துரை வழங்கினார்.தமிழ் ஆட்சி மொழியானால்தான் தமிழ்க்கணினி முயற்சிகள் முழுமையடையும் என்றார்.

மொழித்தொழில் நுட்பமும் தமிழும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கப்பட்டது.பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களும் பேரா.ந.கணேசனும் செய்துள்ள,உருவாக்கியுள்ள மென்பொருள்கள் தமிழுக்கு ஆக்கமானவையாகத் தெரிந்த்து.தமிழ் இலக்கணத்திருத்தி,சொல் திருத்தி, சொற்களஞ்சிய முயற்சிகள் தமிழ் ஆர்வலர்களுக்கு ஊக்கத்தைத் தந்த்து. இவர்களின் மென்பொருள்கள் தமிழில் பிழையாக எழுதுவனவற்றைத் திருத்திக்காட்டுவதாகவும்,இலக்கண ஆய்வுகளுக்கு வழி வகுப்பதாகவும் இருந்தது.


பெருஞ் செலவிட்டுச் செய்துள்ள இந்த மென்பொருள்களைத் தக்க விலைக்கு வழங்க ஆர்வமாக இருப்பதைப் பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்கள் சொன்னவுடன் காந்தளகம் சச்சிதானந்தம் அவர்கள் இவை மக்களுக்கு இலவசமாக்க் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்று கூறினார்.அப்பொழுது இ.கலப்பை முயற்சிக்கு அனைவரும் பங்களித்ததை இராமன் அவர்கள் நினைவூட்டினார்.அரசு அல்லது தனிநபர்கள் உதவி செய்து இந்த மென்பொருள்களை வாங்கி ஆதரிதால் இந்த ஆய்வுகளும் மென்பொருள்களும் தமிழுக்கு ஆக்கமாக இருக்கும் என அனைவரும் கருத்துரைத்தனர்.
பேராசிரியர் கணேசன் அவர்களின் மென்பொருள்கள் கணியன்(தமிழாய்வுக் கருவிகள்)என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளன.இவரின் மென்பொருளில் சொலாய்வி, சொற்றொடராய்வி, தொகுப்பாய்வி,பிழை திருத்தி,சொல்லாக்கி,வேர்ச்சொல்லாய்வி,சொல்லடைவி என்னும் பயன்பாட்டு மென்பொருள்கள் உள்ளன.இத்தனை வசதிகளையும் உடைய மென்பொருள்கள் பயன்பாட்டுக்கு வந்தால் தமிழாய்வுக்கு மிகப்பெரிய பயன் கிடைக்கும்.மேலும் சொற்கள், சொற்றொடர்கள்,பேச்சுச்சொற்கள் பற்றிய ஆய்வுகளைப் பற்றி விவாதித்தனர். தமிழ்ச் சொற்களைக் கணினியில் இட்டு ஆராயும்பொழுது தமிழிலக்கணம் தெளிவாக உள்ளது என்றார்.

இன்றைய தமிழ் வழக்கில் 40,000 சொற்களை நாம் அடிக்கடி பயன்பாட்டில் வைத்துள்ளோம் என்று ஊடகங்களில் வந்த சொற்களைப் பட்டியலிட்டு விளக்கினார் முனைவர் தெய்வசுந்தரம். தெய்வசுந்தரம் அவர்களின் ஒற்றுப்பிழை திருத்தி மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்தால் தமிழைப் பிழையின்றி எழுதமுடியும்.நிதியுதவி கிடைத்தால் சொல் திருத்தி,பிழை திருத்தி வெளிவரும் என்றார்.சொற்களஞ்சியத்தின் தேவை இன்றைய அமர்வில் முதன்மையாக விவாதிக்கப்பட்டது.

நாளைய அமர்வு காலை பத்து மணிக்குத் தொடங்கும்.தி.ந.ச.வெங்கடரங்கன் தலைமையில் நடைபெறும் அரங்கில் பேராசிரியர் வி.கிருட்டினமூர்த்தி, திரு.இளங்கோவன், இரா.ம.கி,பத்ரி, ஆண்டோபீட்டர்,பி.செல்லப்பன்,ஆனந்தன் கலந்துகொண்டு கருத்துரை வழங்க உள்ளனர். யுனிகோடும் தமிழும் என்ற தலைப்பில் அமர்வு நடைபெறும்.

2 கருத்துகள்:

மாலன் சொன்னது…

நன்றி திரு.இளங்கோவன். ஒரே ஒரு திருத்தம். நான் சொன்னது: மொழி சுருங்கிவிட்டது; ஆனால் மொழிப் பயன்பாடு அதிகரித்துள்ளது என்பதே. அதாவது மொழி ஒரே நேரத்தில் இரு வேறு திசைகளில் பயணிக்கிறது.
அன்புடன்
மாலன்

நீச்சல்காரன் சொன்னது…

ஓரளவிற்குச் சந்திப் பிழைகள் திருத்தும் ஒரு இணையச் செயலி இங்குள்ளது
நாவி