நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 9 ஜனவரி, 2010

புதுச்சேரியில் இலக்கிய,கலை விழாக்கள்!

புதுச்சேரியில் நாளும் ஏதேனும் இலக்கிய நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கும்.இன்று(09.01.2010) காரிக்கிழமை மாலை 6 மணியளவில் புதுச்சேரித் தமிழச்சங்க அரங்கில் கவிஞர் ஏசுதாசன் அவர்களின் சிந்தனைப்பூக்கள் என்னும் நூலின் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது.

கவிஞர் ஏசுதாசன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் வரதராசன்பேட்டை மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் பூவை.சு.செயராமன் அவர்கள் ஆவார்.அந்த நூல் வெளியீட்டில் பிழை திருத்தம் உள்ளிட்ட பல வகையில் கவிஞருக்கு நான் உதவினேன்.ஏசுதாசன் புதுச்சேரியில் அரசுத்துறையில் ஓட்டுநராகப் பணிபுரிகின்றார்.எட்டாம் வகுப்பு வரைதான் படித்தவர்.ஓய்வு நேரங்களில் தாம் எழுதிய கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

பூவை.சு.செயராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பேராசிரியர் சாசுமின் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.கல்வி வள்ளல் முத்து ஐயா அவர்கள் முன்னிலையுரையாற்றினார்.கலக்கல் காங்கேயன்,மற்றும் தமிழ்நாட்டுப் போக்குவரத்துத்துறை சார்ந்த பொறுப்பாளர்கள்,புதுவைப் போக்குவரத்துத்துறை ஓட்டுநர்கள் பலர் வாழ்த்துரைத்தனர்.

நான் நூலை மதிப்பிட்டுத் திறனாய்வு செய்தேன்.அரை மணிநேரம் என் பேச்சு அமைந்தது.நான் பேசத்தொடங்கும்பொழுது மத்திய அமைச்சர் மாண்புமிகு வே.நாராயணசாமி அவர்களும் புதுவை முதலமைச்சர் வெ.வைத்திலிங்கம் அவர்களும் சட்டமன்ற உறுப்பினர்கள் பரும் மேடையில் இருந்து என் பேச்சைக் கேட்டனர்.பிறகு சிந்தனைப்பூக்கள் நூலினை மத்திய அமைச்சர் வே.நாராயணசாமி அவர்கள் வெளியிட புதுவை முதலமைச்சர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.

கவிஞர் ஏசுதாசன் அவர்கள் தாம் திரட்டிய ஒரு இலட்சம் உருவா தொகையைத் தந்தையார் பெயரில் அந்தோணிசாமி சமூக,கலை அறக்கட்டளை என்னும் பெயரில் அறக்கட்டளை நிறுவி ஓட்டுநரின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனுக்கு வழங்க முன்வந்துள்ளது பாராட்டினுக்கு உரியது.

அந்த நிகழ்ச்சி முடிந்த நிலையில் உரோமந்து உரோலன் சாலையில் உள்ள அரங்கில் நண்பர் இரகுநாத் மனே அவர்களின் நாட்டியப் பள்ளி சேர்ந்த மாணவர்கள் ஆண்டு விழா கொண்டாடினர்.நண்பர் இரகுநாத் மனே பிரான்சில் வாழ்ந்தாலும் புதுவையை மறக்காதவர்.புதுவையில் பல பிள்ளைகளுக்கு இலவசமாக நாட்டியப்பள்ளி நடத்தி வருகிறார்.என் ஆய்வுப்படிப்புக்காலம் முதல் எனக்கு நெருங்கிய நண்பர்.என் வளர்ச்சி அறிந்தவர்.எனக்கும் வேறு சில அறிஞர்களுக்கும் பாராட்டிப் பட்டம் வழங்கினார்.பிரஞ்சுத்தூதர் வந்திருந்து பட்டங்களை வழங்கினார்.பிரான்சு நாட்டைச்சேர்ந்த இதழாளர்கள் சிலர் என்னைப் படம் பிடித்தனர்.மாணவர்களின் கலை நிகழ்ச்சி மிகச்சிறப்பாக இருந்தது.

திரு.இரகுநாத் மனே செவாலியே விருது பெற்றவர்.அவரும் மிகச்சிறந்த முறையில் நாட்டியமாடினார்.

1 கருத்து:

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

முனைவர் ஐயா அவர்களே! கவிஞர் ஏசுதாசன் அவர்களின் கவித்திறனையும்,கொடைச்சிறப்பையும் தமிழ்கூர் நல்லுலகம் அறியும் படி ஆவணப்படுத்தி,அந்த நூல் வெளியீட்டு விழாவின் நிகழ்வுகளை விவரித்து நேரடி ஒளிபரப்பு செய்துவிட்டது உங்கள் பதிவு.
அன்புடன்,
க.நா.சாந்தி லெட்சுமணன்.