நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 23 ஜூன், 2009

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களைச் சந்தித்தேன்...

செந்தீ நடராசன், ஜெயமோகன், மு.இ, வேதசகாயகுமார் 

 நாகர்கோயிலில் நடைபெறும் தமிழ் இணையப் பயிலரங்கிற்குச்(20.06.09) செல்ல நினைத்ததும் அங்குள்ள எழுத்தாளர்கள் புகழ்பெற்ற இடங்கள் இவற்றைக் காண வாய்ப்பிருந்தால் காணலாம் என நினைத்திருந்தேன். ஒரிசா பாலு கன்னியாகுமரி காலைக்கதிரவக் காட்சி, அருகில் உள்ள அருவிகள் இவற்றைக் காணத்திட்டமிட்டார். ஆனால் இடையில் மழை வந்து எங்கள் திட்டத்தைக் குழப்பியது. அதுபோல் பயிலரங்க நாளின் மாலை நேரத்தில் காகங்கள் நிகழ்ச்சியில் என் அன்புக்குரிய பேராசிரியர் பெர்னார்டு பேட் உரையாற்றுவது அறிந்து அவரைச் சந்திக்கவும் திட்டமிட்டிருந்தேன். அந்த நிகழ்ச்சி நடைபெற்றபொழுது சிறிது தூறலாக இருந்தது எனவும் மின்சாரம் நின்றதால் மெழுகு வெளிச்சத்தில் பேராசிரியர் பேசுவதாகவும் பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்கள் உரைத்தார். எனவே அங்கும் செல்லவில்லை. 

 முதல்நாள் மாலையில் அறையில் எங்கள் இணையப்பக்க வடிவமைப்பில் நண்பர் விசயலட்சுமணன் அவர்களுடன் இருந்தேன். 21.06.09 காலையில் தூறல் என்றதால் எங்கும் புறப்படவில்லை. காலை உணவு முடித்து நண்பர் பிரிட்டோ அவர்களைக் காண்பது என்று முடிவு செய்தேன். அவர் என் வருகைக்குக் காத்திருந்தார்.அதன் பிறகு பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களுடன் இணைந்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களைக் காண நினைத்தேன். பெருமாள் ஐயா ஒரு திருமணத்தில் இருப்பதாகவும் வருவதற்குக் காலம் தாழும் எனவும் குறிப்பிட்டார். எனவே செந்தீ நடராசன் ஐயா அவர்களுடன் முதலில் பிரிட்டோ அவர்களைக் கண்டேன். அவர்தான் நண்பர்களுடன் இணைந்து இணையப் பயிலரங்கம் நடக்க ஏற்பாடு செய்தவர். தலைக்கும் கீழ் உள்ள அனைத்து உடல் உறுப்புகளும் செயல்படவில்லை. கையின் ஒரு பகுதி மட்டும் செயல்படும். அந்த அளவு உடல் ஒத்துழைக்காத நிலையிலும் அமுதம் என்ற இதழை நடத்தி வருகிறார். குடும்பத்தினர், நண்பர்கள் தரும் ஒத்துழைப்பால் இதழாசிரியர் என்று மதிக்கப்பெறுபவர். இவருக்கு இயன்ற வகையில் துணைநிற்பேன் என்று உறுதி உரைத்து அவரிடமிருந்து விடைபெற்று நேரே ஜெயமோகன் அவர்களின் வீட்டுக்குச் சென்றோம்.

  நாகர்கோயில் பார்வதிபுரம் ஐந்தாம் குறுக்குத்தெருவில் உள்ள ஜெயமோகன் வீட்டை அடைவதற்குள் எங்களுக்கு முகவரிக் குழப்பம் ஏற்பட்டதும் ஜெயமோகன் அவர்களுடன் பேசினோம். அவரும் வீட்டைவிட்டுப் புறப்பட்டு எங்களை எதிர்கொண்டு அழைக்க வந்தார். நாங்களும் அவர் வீட்டை நெருங்கி ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டோம். செந்தீ அவர்கள் கலை இலக்கியப் பெருமன்றப் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். 69 அகவையிலும் ஓடியாடி வேலை செய்பவர். சிறந்த நூல்களை எழுதியவ்ர். தொடர்ந்து தமிழினி இதழில் எழுதி வருபவர். இதற்கு முன் ஜெயமோகன் அவர்களை அறிந்திருந்தும் வீட்டுக்குச் சென்றதில்லை. 

 நான் முழுவதுமாக ஜெயமோகனுக்குப் புதியவன். மின்னஞ்சலில் ஓரிரு முறை தொடர்பு கொண்டவன். அவரின் சங்கச் சித்திரங்கள் ஆனந்தவிகடனில் வந்தபொழுது தொடர்ந்து படித்துள்ளேன். தவிர, பிற அவரின் நூல்களைப் படிக்கவில்லை. திண்ணை உள்ளிட்ட இணைய இத்களில் அவர் படைப்புகள், கட்டுரைகளைப் படித்துள்ளேன். அவரின் எழுத்தாற்றல், நடை பற்றி நாண்பர்கள் பலர் வாயாரப் புகழக் கேட்டுள்ளேன். எழுத்துத் துறையில் சாதித்தவர்களைக் கண்டால் அவர்கள் மேல் எனக்கு ஒரு மதிப்பு ஏற்படுவது உண்டு.மாற்றுக் கருத்துடையவர்கள் என்றாலும் அவர்களின் உழைப்பை எண்ணி எண்ணி மதிப்பவன்.
ஜெயமோகனுடன் மு. இளங்கோவன்

  ஜெயமோகனுடன் பொதுவான உரையாடலுக்குப் பிறகு  இணையம் பற்றிய அறிமுகம் நம் மக்களுக்கும் மாணவர்களுக்கும் இல்லாமல் இருப்பது பற்றி உரையாடினோம். அவருக்கு இணையத்தில் ஏற்பட்ட ஈடுபாடு பற்றி கேட்டேன். உரைத்தார். அவரின் படைப்புகள் இணையத்தில் வெளிவந்த பிறகு உலக அளவில் அவரின் படைப்புகள் சென்றதை ஒத்துக்கொண்டார். இணையத்தில் எழுதிய சில படைப்புகள் அவருக்குப் பலவேறு எதிர்ப்புகளைக் கொண்டுவந்ததையும் கூறினார். அவரின் ஆஸ்திரேலியப் பயணம், செல்ல உள்ள அமெரிக்கப்பயணம் பற்றியெல்லாம் எங்கள் பேச்சு திரும்பியது.  சமயம் சார்ந்து எங்கள் பேச்சு நகர்ந்தது. அப்பொழுது திருக்குறள், சிலப்பதிகாரம், இரகுவம்சம் உள்ளிட்ட நூல்களை பற்றியும் சமண சமயம் சார்ந்த உண்மைகள் பற்றியும் பேசினோம். 

 இந்தியா முழுவதும் உள்ள பல பகுதிகளுக்கு ஜெயமோகன் பயணம் செய்த அனுபவங்கள், அவர் கற்ற நூல்கள் பற்றியும் உரையாடினோம். அவரின் பரந்துபட்ட கல்வி, நினைவாற்றல், திட்டமிட்ட செயல்பாடுகள், கால ஓட்டத்திற்குத் தகத் தன்னை மாற்றியமைத்துக்கொள்ளல் இவற்றை அறிந்து மகிழ்ந்தேன். எங்கள் உரையாடல் நகர்ந்துகொண்டிருந்தபொழுது எழுத்தாளர் வேதசகாயகுமார் அவர்கள் இணைந்துகொண்டார். தமிழக கல்வியாளர்கள் பலரைப் பற்றி அவர் கருத்தை முன்வத்தார். எங்கள் எண்ணங்களை முன்மொழிந்தோம். பயனுடைய இலக்கியச் சந்திப்பாக எங்கள் பேச்சு இருந்தது. சந்திப்பைப் பதிவாக்க சில படங்களை எடுத்துக்கொண்டு விடைபெற்றோம். 

 பார்வதிபுரம் வாய்க்கால் தண்ணீர் நிரம்பி ஓடிக்கொண்டிருந்தது. முகம் பார்த்த தென்னை மரங்களின் அழகைக் கண்டு வியந்தபடி நாகர்கோயிலில் இருந்த எங்கள் அறைக்குச் செந்தீ நடராசன் அவர்களின் உந்துவண்டியில் வந்துசேர்ந்தேன்.

1 கருத்து:

ஆதவன் சொன்னது…

valthugal.. oru vendugol. thamizh studio.com idhalgal varisaiyil illai. serkkum ennam illai enraal vittu vidavum. nanri