நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 22 டிசம்பர், 2008

என் படைப்புகளை மறுபதிப்பு செய்பவர்களின் மேலான கவனத்திற்கு...

அன்பு நண்பர்களே! வணக்கம்.
இணையத்தளத்தில் என் பக்கத்திற்கு வந்து படிக்கின்றமைக்கும் தங்கள் மேலான கருத்துகளை வழங்குகின்றமைக்கும் முதற்கண் நன்றி.

என் படைப்புகளை முன்பு இணையத்தில் முதற்கண் பதிப்பிக்கும் இயல்புடையவனாக இருந்தேன்.நண்பர்கள் சிலர் தங்கள் படைப்புகள் போல் அதனை மீண்டும் தங்கள் பக்கத்தில் எடுத்துப் பதிப்பிக்கும் நிலை கண்டு வருந்தினேன்.

பரந்து கிடக்கும் இணைய உலகில் யார் யார் என் படைப்புகளை மறுபதிப்பாக அவர்கள் பெயரில் வெளியிடுகிறார்கள் என உற்று நோக்க எனக்கு நேரம் கிடைக்காததால் பாதுகாப்பு,உரிமை கருதி என் படைப்புகள் பலவும் முதற்கண் தமிழகத்தின் புகழ்பெற்ற
நாளிதழ்கள்,மாத இதழ்களில் அச்சு வடிவம் கண்ட பிறகு அதனை என் வலைப்பூவில் வெளியிட்டு அயலகத் தமிழர்களுக்கு வழங்கி வந்தேன்.

அதனை அறியாமல் சிலர் என் படைப்புகளைத் தங்கள் படைப்புகள் போல் என்பெயர்,என் வலைப்பூ என எந்த அடையாளமும் குறிப்பிடாமல் அடிக்குறிப்பும் வழங்காமல் தாங்கள் அரிதின் முயன்று எழுதியதுபோல் சில இதழ்களில் வெளிப்படுத்தி வருவதை நண்பர்கள் வழியாகவும் நேரிலும் அறிகிறேன்.

அவ்வாறு என் பெயர் குறிப்பிடாமல் என் படைப்புகளை எடுத்துத் தங்கள் பெயரில் வெளியிடுவது ஆய்வு அறமாகாது.அறிவு நேர்மையும் ஆகாது.இன்னொருவரின் பிள்ளையைத் தூக்கி வைத்துக்கொண்டு தன் பிள்ளை என்பது போன்றதே இது.ஒவ்வொரு கட்டுரையை உருவாக்க பல நூலகங்களுக்குச் சென்று குறிப்பெடுத்தும் அறிஞர்களிடத்து நேரிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும், இணையப் பக்கங்களிலிருந்தும் செய்திகள் திரட்டி உருவாக்கப்படுபவை என் கட்டுரைகள்.

அவற்றைப் பயன்படுத்துவோர் முறைப்படி இசைவு பெறுவதும்,உரிய வகையில் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் குறிப்பிடுவது அறிவு நேர்மையாக அமையும்.

அவ்வாறு இல்லாமல் எந்தக் குறிப்பும் சுட்டாமல் எடுப்பது மிகத் தவறு என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொணர்கிறேன்.மீண்டும் இதுபோல் தவறு நேராமல் இருக்க
விரும்புகிறேன்.

என் படைப்புகளை எடுத்தாள யாருக்கும் உரிமை உண்டு.ஆனால் முறைப்படி என் இசைவு பெற்று,பெயர்சுட்டி எடுத்தாள வேண்டுகிறேன்.

கருத்துகள் இல்லை: