நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 13 அக்டோபர், 2008

தமிழ் இணையப் பயிலரங்கிற்கு நாமக்கல் வந்து தங்கியுள்ளோம்...

தமிழ் இணையப் பயிலரங்கில் கலந்துகொள்ள நேற்று(ஞாயிறு) பகல் ஒரு மணியளவில் புதுச்சேரிப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன்.முன்பே திட்டமிட்டபடி பொறியாளர்கள் வெ.யுவராசு அவர்கள் சென்னையிலிருந்தும்,வே.முருகையன் அவர்கள் புதுச்சேரியிலிருந்தும் வந்து புதுச்சேரிப் பேருந்து நிலையத்தில் இணைந்துகொண்டோம்.

சேலம் பேருந்தில் 1.15 மணிக்கு ஏறி,விழுப்புரம் வழியாக ஆத்தூரை 5.30 மணிக்கு அடைந்தோம்.5.45 மணிக்கு அங்குப் பேருந்தேறி இரவு 8.15 மணிக்கு நாமக்கல் வந்தடைந்தோம். முன்பே திட்டமிட்டபடி எங்களை வரவேற்கப் பேராசிரியர் சரவணன் அவர்கள் காத்திருந்தார்.நாமக்கல் அன்னபூர்னா தங்குமனையில் இரவு தங்கினோம்.

பேருந்தில் வந்துகொண்டிருந்தபொழுதே பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்கள்(சிங்கப்பூர்) பேசி அவர்களைப் பற்றிய கட்டுரை என் பக்கத்திலும்,தமிழ் ஓசை நாளிதழிலும் வெளியிட்டமைக் குத் தம் அன்பான நன்றி கூறி மகிழ்ந்தார்கள்.

தருமபுரி நரேந்திரன் அவர்கள் தமிழ் இணையப் பயிலரங்கில் கலந்துகொள்ளும் தம் விருப்பத்தைத் தெரிவித்து,தமிழ் ஓசையில் வந்த திண்ணப்பன் ஐயா பற்றிய கட்டுரைக்கு வாழ்த்துரைத்தார்.அதுபோல் நண்பர் தருமபுரி செல்வமுரளி அவர்கள் தமிழ் முரசு ஏட்டில் தமிழ்இணையப் பயிலரங்கு பற்றி விரிவாகச் செய்தி வந்துள்ளதைத் தொலைபேசியில் குறிப்பிட்டு,தாம் சேலம் வந்துவிட்டதாகவும் காலையில் வந்து நாமக்கல்லில் எங்களுடன் இணைந்துகொள்வதாகவும் தெரிவித்தார்.

தமிழ் இணையப் பயிலரங்கிற்கு வேண்டிய அனைத்துத் தேவைகளையும் கல்லூரித் தாளாளர் திரு.சு.பழனியாண்டி ஐயா மிகச்சிறப்பாக நிறைவேற்றியள்ளமையை அறிந்தேன். இதற்கெனப் பேராசிரியர்கள் மிகச்சிறப்பாகப் பணிபுரிந்துள்ளனர்.உள்ளூர் ஊடகங்களில் இச்செய்தி மிகச் சிறப்பாகப் பரவியுள்ளது..நாளிதழ்கள் பலவும் பயிலரங்கச் செய்தியை மக்களிடம் சிறப்பாகக் கொண்டு சேர்த்துள்ளன.

நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் பல பொறியியல் கல்லூரிகள் புகழ்பெற்று விளங்குகின்றன. கலை,அறிவியல் கல்லூரிகளும் பல உள்ளன.அக்கல்வி நிறுவனங்களிலிருந்து பலர் பங்கேற்க வர உள்ளனர்.இணைய ஆர்வலர்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.ஆயிரத்திற்கு மேற்பட்டவர் நேரடியாகப் பயன்பெற உள்ளனர்.

நண்பர் முகுந்தராசு அவர்களின் ஊர் அருகில் உள்ள சேந்தமங்கலம் என்பதால் அவர் இல்லத்திலிருந்து புறப்பட்டு காலையில் வந்து எங்களுடன் இணைந்துகொள்வார்.

தமிழ் இணையப் பயிலரங்கச் செய்தி அரங்கிலிருந்து உடனுக்குடன் இயன்றவரை தமிழ்மணம் வழியாக உலகிற்குத் தெரிவிக்கப்படும்.

இன்று காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை பயிலரங்கு நடைபெறுவதால் உரையாடலில் இணைய இணைப்பில் உள்ளவர்கள் வந்து அரங்கினரை மகிழ்ச்சியூட்டலாம்.
காலை ஒன்பது மணியளவில் தங்குமனையிலிருந்து புறப்பட்டு மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியை அடைவோம்.

கருத்துகள் இல்லை: