நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 8 செப்டம்பர், 2008

மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் அவர்களின் தமிழ்வாழ்க்கை...


முனைவர் செ.வை.சண்முகம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அறிவுசான்ற மாணவர்கள் பலரை உருவாக்கி உலகிற்கு வழங்கியது.அதுபோல் அங்குப் பயின்ற தன் மாணவர்களையே பேராசிரியர்களாக்கி மேலும் பெருமையை ஈட்டிக்கொண்டது.அவ்வகையில் புகழ்பெற்றவர்களாக அறிஞர்கள் வ.சுப. மாணிக்கனார், ச.அகத்தியலிங்கனார், சோ.ந. கந்தசாமியார், செ.வை.சண்முகனார் உள்ளிட்ட அறிஞர்களை இங்கு நினைவிற்கொள்ளலாம். இவ்வறிஞர் பெருமக்களுள் செ.வை.சண்முகனார் அவர்கள் குறிப்பிடத்தக்க பெருமைக்கு உரியவர்.மிகச்சிறந்த மாணவராகவும்,பேராசிரியராகவும் விளங்கியவர்.ஆற்றல் சான்ற மாணவர்கள் பலரை உருவாக்கியவர். தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் பல ஆய்வுகளை நிகழ்த்தியவர்.அறிவு ததும்பும் நூல்கள் பலவற்றை எழுதி வழங்கியவர்.இவர்தம் வாழ்க்கையை இங்கு நோக்குவோம்.

அறிஞர் செ.வை.சண்முகனார் அவர்கள் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் செயங்கொண்டசோழபுரத்திற்கு அருகில் உள்ள செங்குந்தபுரம் என்னும் ஊரில்23.11.1932 இல் பிறந்தவர்.பெற்றோர் சே.வே.வைத்திலிங்கம்,தாயார் வை.அமிர்தம்மாள் ஆவர்.இவருடன் பிறந்தவர்கள் ஐவர்.

செங்குந்தபுரத்தில் தொடக்கக் கல்வியையும்,உடையார்பாளையத்திலும்,செயங்கொண்டத்திலும் உயர்நிலைப்பள்ளிக் கல்வியையும் படித்தவர். பின்னர் அருகில் உள்ள நகரான கும்ப கோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் இண்டர்மிடியட்(1950-1952)கல்வியையும் முடித்தவர். அதன் பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ(ஆனர்சு) (1952-1955)தமிழ் சிறப்புப்படிப்பும் பயின்றவர்.

இவர் பயின்ற காலங்களில் மிகப்பெரிய தமிழறிஞர்களான பேராசிரியர் சிதம்பரநாதன் செட்டியார், பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம்,கவிஞர் மு.அண்ணாமலை, பேராசிரியர் பூவராகம்பிள்ளை,பேராசிரியர் முத்துச்சண்முகம் பிள்ளை உள்ளிட்ட புகழ்பெற்ற அறிஞர்கள் பணிசெய்துகொண்டிருந்தனர்.இவர்களிடம் கல்வி கற்றமையைத் தம் வாழ்நாளின் பெறற்கரும் பேறாகச் செ.வை.சண்முகனார் கருதுகிறார்.இவருடன் கல்வி பயின்றவர்களுள் கு.சிவஞானம், கு.சிவமணி, வெள்ளையன்,வரதராசன், தேவராசன்,திருஞானசம்பந்தன், லூசிமேரி ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், பேராசிரியர் ச.அகத்தியலிங்கனார் ஆகியோரின் வழிகாட்டலில் எம்.லிட் பட்டத்தையும்(1959), முனைவர் பட்டத்தையும் பெற்றார்(1967).

கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு விக்டோரியா அரசினர் கல்லூரியில் ஒரு சில மாதங்கள் பணியாற்றிய பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியேற்றார்(1955).சற்றொப்ப முப்பத்தாறு ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணி செய்து 1992இல் ஓய்வு பெற்றவர்.இங்கிலாந்தில் உள்ள ரெடிங் பல்கலைக்கழகத்தில் உயராய்வு மேற்கொண்டு(1972 -73)பிரிட்டிசு அருங்காட்சியகத்தில் இருந்த சுவாமிநாதம் என்ற ஐந்திலக்கண நூலைப் பதிப்பித்து வழங்கினார்.

இந்தோனேசியாவிலுள்ள சகார்த்தா பல்கலைக்கழகத்தில் இரண்டரை ஆண்டுகள்(1976-78)வருகை தரு பேராசிரியராகப் பணி செய்து தனித்திறமையை வெளிப்படுத்தியவர்.அப் பல்கலைக்கழகத்தில் அவர் நிகழ்த்திய ஆய்வுகள் Indonesian studies, என்ற நூலாக வெளிவந்தது.மேலும் அங்கு நடந்த எழுத்துச்சீர்திருத்தத்தை ஒட்டித் தமிழில் செய்யவேண்டிய திருத்தங்களை எழுத்துச்சீர்திருத்தம் என்ற பெயரில் நூலாக்கினார்.மலேசியா பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள இந்தியக்கல்வித்துறையில் மூன்றாண்டுகள் வெளிநாட்டு வல்லுநராகப் பணிபுரிந்தவர்.

பிரான்சு,செர்மனி,மலேசியா,சிங்கப்பூர்,,சப்பான்,அமெரிக்கா ஆகிய வெளிநாடுகளுக்குச் சென்று
புகழ்பெற்ற பல கருத்தரங்குகளில் கலந்துகொண்ட சிறப்பிற்கு உரியவர்.கல்வெட்டு ஆய்வின் மூலம் தம் ஆய்வுப்பரப்பை வெளிப்படுத்திய செ.வை.சண்முகனார் மொழியியல், ஒப்பிலக்கணம்,அகராதியியல் எனும் பலதுறைகளில் தம் ஆய்வுகளை நிகழ்த்தியவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், இணைப்பேராசிரியர், பேராசிரியர், இயக்குநர் உள்ளிட்ட பல நிலைகளில் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.இவரால் மொழியியல் துறையில் தரமான பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.தமிழ் மரபு இலக்கணங் களை மொழியியல் நோக்கில் ஆராய்ந்து எழுத்திலக்கணக் கோட்பாடு, சொல்லிலக்கணக் கோட்பாடு உள்ளிட்ட நூல்களை வழங்கியவர்.பேராசிரியர் செ.வை. சண்முகனார் இதுநாள்வரை 26 நூல்களையும் 200 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியவர்.

அறிஞர் சண்முகனார் (வேறொரு காட்சி)


பேராசிரியர் மலையாள மொழியின் இலக்கணம் பற்றித் தமிழில் எழுதிய நூல் மலையாள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.பேராசிரியரின் மூன்று நூல்கள் இதுவரை அரசின் பரிசில்களைப் பெற்றுள்ளன.இவர்தம் மேற்பார்வையில் பன்னிருவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.இவர்தம் மொழியியல் துறை மாணவர்கள் தமிழகத்திலும் அயல் மாநிலங்களிலும்,அயல்நாடுகளிலும் பணிபுரிகின்றர்.

செ.வை.சண்முகனார் அவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்,மைசூர் செம்மொழித்தமிழ் உயராய்வு நிறுவனம் ஆகியவற்றில் உயராய்வுகளை நிகழ்த்தியவர். மொழியிலுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது,மொழிஞாயிறு என்னும் பட்டம் பெற்ற பெருமைக்கு உரியவர்.

சிதம்பரம் அண்ணாமலை நகர் அருகில் உள்ள மாரியப்பா நகரில் அமைதிவாழ்க்கை வாழ்ந்துவரும் பேராசிரியர் அவர்கள் அறிஞர் ச.அகத்தியலிங்கனார், பேராசிரியர் இரா.சாரங்கபாணியார்,திரு,சாமிநாதன் உள்ளிட்டவர்களுடன் ஆய்வுத் தொடர்பாக உரையாடுவதை வழக்கமாக் கொண்டவர்.இவர்தம் பவளவிழா அவர்தம் மாணவர்களால் அண்மையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு அழகிய மலர் ஒன்றும் வெளியீடு கண்டுள்ளது.

செ.வை.சண்முகனார் அவர்கள் தனலட்சுமி அம்மையாரை மணம் செய்துகொண்டவர். இவர்களுக்குத் திரு.வேலாயுதன் என்ற மகனும்,திருவாட்டி உமாசண்முகம் என்ற மகளும் உள்ளனர்.இவர்கள் அயல்நாடுகளில் பணிபுரிகின்றனர்.

செ.வை.சண்முகனார் வழங்கிய நூல்கொடை

1.சுவாமிநாதம்(உரையும் பதிப்பும்),1975
2.எழுத்துச் சீர்திருத்தம், 1978
3.எழுத்திலக்கணக் கோட்பாடு, 1980
4.சொல்லிலக்கணக் கோட்பாடு-1, 1984
5.மொழியும் எழுத்தும், 1985
6.சொல்லிலக்கணக் கோட்பாடு-2, 1986
7.மொழி வளர்ச்சியும் மொழி உணர்வும்(சங்க காலம்), 1989
8.மலையாளமொழியின் முதல் இலக்கணம், 1992
9.சொல்லிலக்கணக் கோட்பாடு-3,1992
10.கிறித்தவ அறிஞர்களின் இலக்கணப்பணி,1993
11.அறிவியல் தமிழாக்கம்,1994
12.இலக்கண உருவாக்கம்(பல்லவ-பாண்டியர் காலம்),1994
13.இலக்கியமும் மொழியமைப்பும்,1998
14.கவிதைமொழி,2000
15.இக்கால எழுத்துத்தமிழ்,2001
16.குறள் வாசிப்பு,2002
17.கவிதைக் கட்டமைப்பு,2003
18.தொல்காப்பியத் தொடரியல்,2004
19.இலக்கண ஆய்வு,2004
20.மொழி ஆய்வு,2005
21.யாப்பும் நோக்கும்(தொல்காப்பியரின் இலக்கியக்கோட்பாடு),2006

ஆங்கில நூல்கள்

22.Naccinarkkiniyar's conception of phonology,1967
23.The language of Tamil Inscription 1250-1350 A.D(with prof.S.A)
24.Dravidian Nouns(A comparative study),1971
25.Indonesian Studies,1979
26.Aspects of Language development,1983


பவளவிழா மலர்


இக்கால எழுத்துத்தமிழ்


செ.வை.சண்முகம் அவர்களின் நூல்


செ.வை.சண்முகம் அவர்களின் நூல்


செ.வை.சண்முகம் அவர்களின் நூல்


நூல் முகப்பட்டை

நூல் முகப்பு

சுவாமிநாதம் நூல் முதற்பக்கம்

நூல் முகப்பட்டை

பேராசிரியர் செ.வை.சண்முகம் அவர்களின் முகவரி:
முனைவர் செ.வை.சண்முகம்
194,திருவேரகம்,
மாரியப்பா நகர்,அண்ணாமலை நகர் -அஞ்சல்,
சிதம்பரம்-608002


குறிப்பு:
அறிஞர் செ.வை.சண்முகனார் பிறந்த ஊருக்கு அருகில்தான் என் பிறந்த ஊர் இடைக்கட்டு உள்ளது.பேராசிரியர் அவர்களின் உறவினர்கள் பலரும் எங்கள் குடும்பத்துடன் தொடர்புடைய நட்புடையவர்கள்.1992 அளவில் பேராசிரியரின் வாழ்க்கைக் குறிப்பை அனுப்பும்படி யான் மாணவானாக இருந்தபொழுது வேண்டினேன்.அப்பொழுதே முகமறியாத சூழலில் அனுப்பி வைத்தார்கள்.அதன் பிறகு பல கருத்தரங்குகளில் கலந்துகொள்ளும் பொழுதெல்லாம் உரிமையுடன் அழைத்துப் பழகும் அன்பு நெஞ்சினர் நம் பேராசிரியர்.அவர்களின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள மாரியப்பா நகர் வீட்டில் உரிய செய்திகளைப் பெறவும் படமெடுக்கவும் நேரில் சென்றேன்.அவ்வாறு செய்திகள் பெற உதவியர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துத் தமிழியல்துறைப் பேராசிரியர்கள் என் அன்பிற்குரிய முனைவர் அரங்க.பாரி,முனைவர் தங்கையன்,பேராசிரியர் மூவேந்தன் ஆகியோர்.அவர்களுக்கு நன்றி.

உதவிய நூல்கள்

தமிழ் மொழியியல் புதிய சிகரங்கள்- பேராசிரியர் செ.வை.சண்முகனார் பவளவிழா மலர், 2008.
பேராசிரியரின் பிற நூல்கள்

கருத்துகள் இல்லை: