நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 20 மே, 2008

நாட்டுப்புறவியல் பேராசிரியர் தே.லூர்து அவர்கள் மறைவுக்கு வருந்துகிறேன்...


பாளையங்கோட்டை என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் அவ்வூர் நினைவுக்கு வரும்.புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் பல உள்ளதால் கற்றவர்களுக்கு அவ்வூர் கல்வி சார்ந்து நினைவுகளை ஏற்படுத்தும்.புகழ்பெற்ற பேராசிரியர்கள் பலர் ஆவ்வூரில் கல்விப்பணி செய்துள்ளனர் அவர்களுள் பேராசிரியர் தே.லூர்து அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்.

நாட்டார் வழக்காற்றியல்(நாட்டுப்புறவியல்) துறையில்ஆழ்ந்த புலமைபெற்றவர்.பல நூல்களை உலகத்தரத்திற்கு இத்துறையில் எழுதியவர்.பல மாணவர்களை இத்துறையில் கற்கவும் ஆராய்ச்சி செய்யவும் ஊக்கப்படுத்தியவர்.நாட்டார் வழக்காற்றியல் பற்றிய களப்பணிகளுக்கு முதன்மை கொடுத்தவர். ஆவணக்காப்பகம் ஒன்றை உருவாக்கி ஒளிப்படங்கள், ஒலி-ஒளிக்காட்சிகள்,நூலகம் அமைத்தவர்.முதுகலை நாட்டார் வழக்காற்றியல் துறையை முதன்முதல் உருவாக்கிப் பல மாணவர்கள் படிக்கவும் ஆய்வு செய்யவும் வழி வகுத்தவர்.

தமிழகம் மட்டுமன்றி அயல்நாட்டினர் பலரும் தமிழகத்தில் நாட்டுப்புற ஆய்வுகளை மேற்கொள்ள துணைநின்றவர்.நாட்டுப்புறவியல் என்னும் தலைப்பில் நான் எழுதிய நூலினைக் கண்ணுற்ற பேராசிரியர் அவர்கள் எனக்கு மடலிட்டு ஊக்கப்படுத்தினார்கள்.என்னுடன் தொலை பேசியில் பேசி ஊக்கப்படுத்தினார்.இத்துறையில் ஆர்வம்காட்டும் யாரையும் அன்புடன் வழிகாட்டி நெறிப்படுத்துவது பேராசிரியரின் இயல்பாகும்.

பேராசிரியர் தே.லூர்து அவர்களின் முன்னோர்கள் ஊர் தேவகோட்டைக்கு அருகில் உள்ள வடக்கு ஆண்டாவூரணியாகும்(?).பர்மா சென்ற முன்னோர்கள் அங்கே தங்கி வாழ்ந்தனர். எனவே லூர்து அவர்கள் பர்மாவில் உள்ள தாந்தபீனில் 1937 சூன் 26 ஆம் நாள் பிறந்தவர்.பர்மாவில் தனியாக சவரிமுத்து ஆசிரியரிடம் கல்வி கற்றார். வாய்பாடுகள், ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,விவேகசிந்தாமணி முதலியவற்றைக் கற்றார்.

உலகப்போரின் போது தம் சொத்துகளை இழந்த குடும்பத்தினருடன் புறப்பட்டு ரங்கூன் வந்து ஆண்கள் பள்ளியில் படித்தார்.இரண்டாம் உலகப்போருக்குப் பின் தமிழகம் வந்த லூர்து 1947 இல் தேவகோட்டை தேபிரித்தோ உயர்நிலைப்பளியில் சேர்ந்து ஐந்தாம் வகுப்பில் படித்தார்.ஏழாண்டுகள் அங்கு படித்தார்.இளம் வயதில் கதை கேட்பதிலும் படிப்பதிலும் நாட்டம்.திராவிட இயக்க ஏடுகளையும் படிக்கத் தொடங்கினார்.

பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்று திருச்சி தூயவளனார் கல்லூரியில் இணைந்து படித்தார்.வரலாற்றுப் பாடத்தை இண்டர்மீடியட்டில் படித்தவர்.பிறகு பி.ஏ.பொருளாதாரம் பயின்றவர்.காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியம் வ.சுப.மாணிக்கம் அவர்களிடம் கற்றவர்.சவேரியார் கல்லூரியில் பணியில் இணைந்து தமிழ்ப்பணிபுரிந்தார்.1965 சூன் 24 இல் திருமணம்.

தமிழ்ப்பழமொழிகள் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்.24 ஆண்டுகள் தமிழ்த்துறையில் பணிபுரிந்தவர்.நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுமையம்(1987) உருவாக்கி நாட்டுப்புறவியலுக்குத் தனித் துறையை உருவாக்கிய பிறகு பல்வேறு பயிற்சிப் பயிலரங்குகள் நாட்டார் வழக்காற்றியல் துறைக்கென நடத்தி அத் துறை சார்ந்த மேனாட்டு அறிஞர்களை அழைத்து வந்து பலருக்குத் தமிழகத்தில் பயிற்சியளிக்கச் செய்தார்.

தாம் பயன்படுத்திய நூல்களைத் தாம் உருவாக்கிய நாட்டார் வழக்காற்றியல் மைய நூலகத்திற்கு வழங்கிவிட்டார். நாட்டுப்புறவியல் ஆய்வையே தம் வாழ்க்கையாக்கிக் கொண்ட பேராசிரியர் தே.லூர்து அவர்கள் 05.04.2008 இல் மறைவுற்றார் என்ற செய்தி காலத்தில் அறியமுடியாமைக்கு வருந்துவதுடன் பேராசிரியரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் அவரின் மாணவர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்தம் நூல்களுள் சில :

1.தமிழ்ப்பழமொழிகள் ஓர் ஆய்வு(முனைவர் பட்ட ஆய்வேடு,1980)
2.நாட்டார் வழக்காற்றியல் ஓர் அறிமுகம்(1976)
3.நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் தொகுதி ஒன்று(1981)
3.நாட்டார் வழக்காற்றியல் கள ஆய்வு (1986)
4.நாட்டார் வழக்காறுகள்(1988)

நன்றி
1.வல்லினம்
2.உங்கள் நூலகம்

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

நானும் எனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துகொள்கிறேன்.நல்ல ஆய்வாளர் மறைவினால் தமிழன்னையும் வருந்துகிறாள்.
என்செய?

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

பேராசிரியர் அவர்களின் பகிர்தலுக்கு நன்றியன்.
மு.இளங்கோவன்