நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 28 அக்டோபர், 2007

தமிழ்நாட்டில் தமிழ்படித்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது!

தமிழ்மொழி தொன்மையானது,செம்மொழித்தகுதியுடையது என மேடைமுழக்கம் செய்தவர்களே தமிழ்படித்தவர்களுக்கு எதிரான செயல்களில் இன்று இறங்கிவிட்டனர். தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தமிழ் இலக்கியங்களை இளங்கலை, முதுகலை,இளம்முனைவர்,முனைவர் பட்ட வகுப்புகளில் நேரடி வகுப்புகளில் பயிற்றுவிக் கின்றன.இதில் பல்லாயிரம் பேராசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பல இலட்சம் மாணவர்கள் தமிழ் இலக்கியங்களை நேரடியாகப் படித்துவிட்டு,கல்வியியல்
( B.Ed) பட்டங்களைப் பெற்றும் பல ஆண்டுகளாக வேலையின்றி வேலைவாய்ப்பகத்தில் பதிவுசெய்துவிட்டுப் பணிவாய்ப்பின்றி உள்ளனர்.இவர்கள் எந்தச் சங்கத்தின் பெயரிலும் ஒன்றுகூடாமல் உள்ளதால் பணிவாய்ப்பிற்குரிய அறிகுறியே இல்லாமல் உள்ளனர்.இவ்வாறு தமிழ் இலக்கியம் பயின்றவர்களில் மகளிரின் எண்ணிக்கை மிகுதி. தாழ்த்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையும் மிகுதியாகும்.இவ்வாறு தமிழ் இலக்கியத்தை முறையாகக் கற்றவர்களின் நிலை உள்ளது.

இன்று ஆசிரியர் பயிற்சியைக் காசுக்கு விற்கும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தமிழகத்தில் மிகுதியாகத் திறந்து கடைவிரித்துக் கிடக்கின்றன.இங்குப் படித்து(!) வேலைக்கு வருபவர்கள் செய்யும் முதல் வேலை தமிழகத்தின் மிகப்பெரிய பணக்காரத் தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டங்களைக் காசுக்குப் பெற்று விடுகின்றனர்.

தொடக்கப்பள்ளிகளில் வேலைக்குச்சேரும் இவர்கள் தங்களின் அஞ்சல்வழிப் பட்டங்களைக் காட்டி நடுநிலை,உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராக வந்துவிடுகின்றனர். இதற்கு இவர்களின் கூட்டணிகளும்,பணப்புழக்கமும்,வாக்குகளும்,அரசியல்காரர்களை வளைத்துப்போடும் மாநாட்டு உத்திகளும் பெரிதும் கைகொடுக்கின்றன.

ஆசிரியர்பயிற்சி முடித்தவர்கள் (D.T.Edu.) கல்லூரி,பல்கலைக்கழகத்திலும் கால்வைத்து விடுகின்றனர். ஆசிரியர் பயிற்சியோடு பணிக்கு வந்தவர்கள் பட்டம்பெற்றால் பணப்பயன் வழங்கலாமே தவிர தகுதி மீறிய பணியைக்கொடுப்பது கல்வியுலகில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் எனக் கல்வியாளர்கள் கருத்துரைக்கின்றனர்.

தமிழ் இலக்கியங்களை முறையாகப்படித்தவர்களே தமிழாசிரியராக வருதல் வேண்டும்.தமிழ் தவிர பிற கணக்கு,ஆங்கிலம்,வரலாறு,அறிவியல் பட்டம் பெற்றாலும் ஆசிரியர்பயிற்சி மட்டும் பெற்றுத் தொடக்கப்பள்ளியில் பணியில் இருப்பவர் கல்வியியல் பட்டம் பெற்றால்தான் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியராக முடியும்.தான் பட்டம் பெற்றுவிட்டேன் என்னை நடுநிலைப்பள்ளி ஆசிரியராக்கு எனத் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் பிறதுறை ஆசிரியர்கள் கேட்பதில்லை.விதியும் இல்லை.

ஆனால் ஆசிரியர்பயிற்சி மட்டும் முடித்து தொடக்கப்பள்ளியில் பணியிலிருப்பவர்கள், அஞ்சல்வழியில் தமிழ் பி.லிட்,பி.ஏ பட்டம் மட்டும் பெற்றவர்கள் நடுநிலைப்பள்ளித் தமிழ்ஆசிரியராகலாம் என அண்மையில் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.இவ்வகையில் 6700 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இவ்வாறு செய்வதன்வழி எதிர்காலத்தில் தமிழ் இலக்கியம் நேரடியாகப்படிப்போர் எண்ணிக்கை இல்லாமல் போகும். தமிழகத்தில் நேரடியாக நடைபெறும் பல்வேறு கல்லூரிகளின் தமிழ்வகுப்புகள் மாணவர்களின் வருகை இன்மையால் மூடவேண்டியதேவை ஏற்படலாம். தமிழ்வகுப்புகளை இதுநாள் வரை படித்துவிட்டு பணிக்குச் செல்லாதவர்கள் பாரதூரமான துன்பங்களைச் சந்திப்பர்.இவற்றை எதிர்த்துத் தமிழ் படித்த மாணவர்கள் நீதிமன்றத்தை நாட உள்ளனர்.

அஞ்சல்வழிக்கல்வியால் தமிழுக்கு நேர்ந்துள்ள முதல்அடியாக இதனைக்கருதலாம். தமிழ்நாட்டுக் கல்வியில் அறிவுப்பூர்வ பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளதை இது காட்டுகிறது.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

http://www.petitiononline.com/19652007/petition.html

பெயரில்லா சொன்னது…

padaiyeduthuvaram pannatu niruvanagalil PRO matrum vilambara thuraigalukku tamil padithavargalukku moonurimai tharavendum.
alumaiyil ullavargal muyarchi seivaargala?